30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு
Recommended Video
திருவண்ணாமலை: திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய பஞ்சாயத்து ஓயாத நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பது திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவருக்கு அண்மையில் பாஜக காவி சாயம் பூசியது சர்ச்சையானது. இதற்கு மிக கடுமையான எதிர்ப்பும் எழுந்தது. ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கூட காவி சாயம் பூசப்பட்ட திருவள்ளுவர் படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார்.
இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த ட்வீட்டை வெங்கையா நாயுடு நீக்கியிருந்தார். ஆனாலும் தமிழக பாஜகவினர் அவ்வப்போது காவி சாயம் பூசப்பட்ட திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது திருவண்ணாமலை அருகே கருங்காலி குப்பத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பது பரபரப்பாகி உள்ளது. பொதுவாக எம்ஜிஆர் சிலைகளில் சட்டை வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்.
திருவண்ணாமலை கருங்காலி குப்பத்தில் 30 ஆண்டுகளாக இருக்கும் எம்ஜிஆர் சிலையும் அதேபோல்தான் இருந்து வந்தது. தற்போது திடீரென எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.