15 டயர்கள் அடுத்தடுத்து டமார் டமார்.. செங்கத்தை விட்டு நகர முடியாமல் நிற்கும் பெருமாள்!
பிரமாண்ட பெருமாள் சிலையின் லாரி டயர்கள் அடுத்தடுத்து வெடித்தன
செங்கம்: டமார்.. டமார்.. என 15 டயர்கள் அடுத்தடுத்து வெடித்ததில் பெருமாளை செஞ்சியை விட்டு நகர்த்தி கொண்டு போக முடியவில்லை.
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் கடந்த 7-ம் தேதி புறப்பட்டது. வந்தவாசி, திருவண்ணாமலை, தாண்டி செங்கம் வருவதற்குள் ஒரு மாதமாகி விட்டது.
டயர்கள் பஞ்சர்
பெருமாளின் பாரம் தாங்க முடியாமல் கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகளோடுதான் லாரி நகர்ந்தாலும், இன்னமும் அதே போன்ற இடர்பாடுகளைத்தான் சந்தித்து வருகிறது. இதில் முக்கியமானது வந்தவாசியில் இருந்து திருவண்ணாமலை வருவதற்குள் பல்வேறு இடங்களில் லாரி டயர்கள் பஞ்சராவதுதான்.
பக்தர்கள்
நேற்றிரவு செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்துக்கு சிலை வந்தது. ஆனால் சிலை வருவதற்கு முன்னமேயே ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டு வந்து விட்டார்கள். சாமி தரிசனம், உண்டியல் காணிக்கை என எல்லாம் முடிந்து அம்மாபாளையத்தில் இருந்து பெருமாள் சிலை புறப்பட தயாரானது.
15 டயர்கள்
ஆனால் அந்த நேரம் பார்த்து லாரியில் இருந்த 240 டயர்களில் 15 டயர்கள் டமார் என அடுத்தடுத்து வெடித்தன. ஒரேடியாக 15 டயர்கள் பஞ்சர் ஆகிவிட்டதால், மாற்று டயர்கள் கையில் இல்லை. அவை அகமதாபாத்திலிருந்து கொண்டு வர வேண்டுமாம். அங்கிருந்து அவை வந்தால்தான் பஞ்சர் ஆன டயர்கள் மாற்றப்பட்டு லாரி கிளம்பும் என்று கூறப்படுகிறது.
மண் சாலைகள்
மேலும் அம்மாபாளையம் - செங்கம் இடையே 18 கி.மீட்டருக்கு மண் சாலைகள் உள்ளது என்பதால் அதை தாண்டி பெருமாளை கொண்டு செல்வதில் திரும்பவும் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. அதனால் டயரை மாற்றி, மண் சாலையையும் சீரமைத்தபிறகுதான் லாரி செல்ல முடியும். அதனால் பெருமாள் இப்பவும் செங்கத்தில்தான் இருக்கிறார் என்றாலும் எதிர்வரும் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறி சென்று கொண்டே இருக்கிறார்.