முன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் "டாக்டர்" கவிதா
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் ஒருவர் கணவருடன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருகலைப்பு நடைபெறுவதாக எஸ்பிக்கு புகார் எழுந்தது. இதையடுத்து திருவண்ணாமலை முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த கடை உரிமையாளர் கவிதாவிடம் (32) போலீஸார் விசாரித்தனர். அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. அப்போது கடையில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் கருக்கலைப்பு செய்ய வந்ததாக கூறினார்.
மும்பை டாக்டர் பாயல் தற்கொலை வழக்கு: சாதியை சொல்லி சாகடித்த 3 டாக்டர்கள் கைது
கர்ப்பம்
இதையடுத்து மேலும் விசாரணையில் அந்த பெண் கலசப்பாக்கத்தை அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் திருமணமாகி ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமானதால் கருவை கலைக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, எஸ்பி சக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பேன்சி ஸ்டோரில் சோதனை நடத்தப்பட்டது.
படுக்கை
இந்த சோதனையில் வாட்டர் கேன்கள் வரும் அட்டை பெட்டியில் கருக்கலைப்பு செய்யும் கருவிகள், மருந்து மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ஸ்கேன் இயந்திரமும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு படுக்கையும் இருந்தது.
கருக்கலைப்பு
இதுகுறித்து ஆட்சியர் கந்தசாமி கூறுகையில் திருவண்ணாமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி ஒருவர் திடீரென சிகிச்சைக்கு வராமல் இருந்தார். இதுகுறித்து விசாரித்த போது கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.
கருக்கலைப்பு
அந்த பெண்ணின் செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்த கவிதா என்பவர் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. கிரிவல பாதையில் இந்த கடை உள்ளதால் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் முன்பக்கம் பேன்ஸி ஸ்டோர் வைத்து உள்ளே கருக்கலைப்பு மையம் நடத்தி வந்துள்ளனர்.
தம்பதி கைது
10 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கருக்கலைப்பு மையத்தில் 4000 பேர் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து கடைக்கு சீல் வைத்து கவிதா அவரது கணவர் பிரபு ஆகியோரை கைது செய்துள்ளோம் என்றார் ஆட்சியர்.