தேர்தலை மற்றொரு தேதியில் நடத்துங்கள்… திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை தள்ளிவைக்கும்படி கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் மனு அளித்துள்ளார். அதில், தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதி அமைந்திருக்கிறது.
நன்றி சொல்வோம்.. மன்னிப்பு கேட்கப் பழகுவோம்.. அதற்கும் ஒரு "தினம்" கொண்டாடுவோம்!
இதனால் திருவண்ணாமலை தொகுதியில் தேர்தலை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் ஓட்டுபெட்டியை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் திருவண்ணாமலை தொகுதி தேர்தலை மாற்று தேதியில் நடத்த ஆவண செய்ய வேண்டும்.
இந்து மக்களின் தருமத்திற்கும், எண்ணங்களுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மாற்று தேதியை ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சட்டரீதியான பரிசீலனை செய்து முன் கூட்டியே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று, நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் தினத்தன்று மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கூறியுள்ள நிலையில், தேர்தலை மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.