ஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா
திருவண்ணாமலை: "நான் ஆத்தா வந்திருக்கேன்.. அவங்க இங்கே வந்து தண்ணி பிடிக்க கூடாது.. அதனாலதான் மழை பெய்யல" என்று பெண் ஒருவர் சாமியாடி அருள்வாக்கு சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி அடுத்துள்ள ஊர் பிருதூர். இங்குள்ள பொன்னியம்மன் கோவில் வளாகத்தில் கைப்பம்பு ஒன்று உள்ளது. இது கோவில் சார்பில் அமைக்கப்பட்ட குழாய் ஆகும்.
இப்போது குடிநீர் பிரச்சனை தலைதூக்கி உள்ளதால், கிராம மக்கள் இந்த கோயிலுக்குள் வந்துதான் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென சாமியாடினார். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கோவில் குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது, பைப்பில் தண்ணீர் பிடித்து செல்வதால்தான் மழை பெய்யாமல் உள்ளது" என்றார்.
உடனே கோயில் பூசாரியும், பெண் இப்படி அருள் வாக்கு சொல்லிவிட்டதால், பூஜை செய்த பிறகுதான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று அந்த பிரிவு மக்களிடம் சொல்லி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மக்கள், தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி, வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் கோவில் குழாயில் தாராளமாக தண்ணீர் பிடிக்கலாம். உங்களை யாரும் தடுக்கமாட்டார்கள் அப்படி யாராவது தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சமாதானம் செய்தனர். அதன்பிறகு மக்கள் மறியலை கைவிட்டனர்.