மளிகைக் கடை கூட நடத்த தகுதியற்றவர் கமல்.. வீட்டுக்குள்ளேயே கூட்டம் நடத்தும் ரஜினி.. அமைச்சர் நறுக்!
திருவண்ணாமலை: மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பலசரக்கு கடை கூட நடத்த தகுதியற்றவர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஒருவரின் இல்ல திருமண விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்றவுடன் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமைக்கும் கூட்டணிதான் வெற்றி கூட்டணி.
ரஜினி
அது யாருடன் என்பதை முதல்வரும் துணை முதல்வரும் அறிவிப்பார்கள். பொதுக் குழுவை சிறிய அரங்கத்தில் நடத்தும் அளவுக்குத்தான் ரஜினியின் மக்கள் மன்றம் உள்ளது.
உடல்நலம்
ரஜினிகாந்துக்கு வயதாகிவிட்டதால் அரசியல் சரிபட்டு வராது என்று தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலம் பெற்று அரசியலுக்கு திரும்ப வேண்டும்.
சந்திக்க தயார்
பலசரக்கு கடை கூட நடத்த தகுதியில்லாதவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் நடத்தினாலும் அதை நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார் அமைச்சர்.
அமைச்சர் கிண்டல்
நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது உள்ளிட்ட ஒரு சில அறிவிப்புகளை நேற்றைய தினம் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து நிர்வாகிகள் முன்பு அறிவித்தார். பொதுவாக இது போன்ற அறிவிப்புகள் பொதுக் குழு கூடியே நடத்தப்படும். இதைதான் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக கூறியுள்ளார்.