ரீவைண்ட் 2020! மாமியார் ஆவி அழைத்ததால் மகளை கொன்ற தாய்..பேத்தி வயது பெண்ணை கைபிடித்த திமுக நிர்வாகி
திருவண்ணாமலை: மாமியார் ஆவி அழைத்ததால் பெற்ற மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற தாய், பேத்தி வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட திமுக நிர்வாகி உள்ளிட்ட சம்பவங்களை மறக்க முடியுமா?
Recommended Video
2021 புதுவருடம் பிறக்க உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாப் 10 இடங்களில் இருக்கும் சம்பவங்கள் பின்வருமாறு:
1. இரு மனைவிகளும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமம் வழுவூர்- அகரம்.. இங்கு வசித்து வருபவர்தான் தனசேகர்.. இவர் ஒரு விவசாயி.. இவருக்கு செல்வி, காஞ்சனா என்ற இரண்டு மனைவிகள்.இருவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றனர் 2 பக்கம் 2 மனைவிகளுக்கு மாலை அணிவித்து . பூரிப்பில் நனைந்தார் தனசேகரன்.
2. எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு
திருவண்ணாமலை அருகே கருங்காலி குப்பத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது. 30 ஆண்டுகளாக வெள்ளையாக இருந்த எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு காவி சாயம் பூசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .காவி சாயம் பூசிய நபர்களை கைது செய்ய புகார் அளித்தனர்.
3. கொரோனாவை நினைத்தால்... தூக்கம் கூட வருவதில்லை... தழுதழுத்த எ.வ.வேலு
கொரோனாவில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே உள்ளதால் இரவு நேரத்தில் கூட தனக்கு தூக்கம் வருவதில்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புவோர் தலை முதல் கால் வரை குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்
4. மாமியார் ஆவி அழைத்ததால் பெற்ற மகளை கழுத்தை அறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள கிராமம் கீழ்சிறுப்பாக்கத்தில் இறந்து போன மாமியார் மாமனார் அழைத்ததால் சுகன்யா என்பவர் தனது 6 வயது மகளை துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயற்சித்த கொடூரம் நிகழ்ந்தது அந்த குழந்தையை நினைத்தாலே நமக்கு நெஞ்சம் பதறி போய்விடுகிறது!
5. இன்ஸ்பெக்டர் அல்லிராணிக்கு சல்யூட் செய்த திருவண்ணாமலை ஆட்சியர்
சுதந்திர தின விழா மேடையில் மாவட்ட ஆட்சியர் திடீரென தான் நின்றிருந்த இடத்தில் பெண் இன்ஸ்பெக்டரை அழைத்து சல்யூட் அடித்து மரியாதை செய்த சம்பவம் விழாவில் பங்கேற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏரிப்பட்டு கிராமத்தில் அமாவாசை என்பவர் மின்வேலியில் சிக்கி இறந்தார். அவர், கொரோனாவுக்கு இறந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரின் உடலை தூக்க மறுத்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் அல்லிராணி களத்தில் இறங்கி உயிரிழந்த அமாவாசையின் உடலை தூக்கி அப்புறப்படுத்தினார். இதற்காக, அவருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். அல்லிராணிக்கு 'கல்பனா சாவ்லா' விருதுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம்
அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண், திருவண்ணாமலை அத்தியந்தலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துவந்துள்ளார் அவர் வீட்டுக்குள் சாமியார் மணிகண்டன் அத்துமீறி நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார். ஆத்திரமடைந்த அந்த பெண் இரும்புதடியால் சரமாரியாக மணிகண்டனை தாக்கினார். இதில் தலையில் காயங்களுடன் பொதுமக்களிடம் சிக்கினார் மணிகண்டன். பின்னர் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
7. கலெக்டர் கந்தசாமியின் இறைவனின் சமையலறை
பசியால் வரும் முதியவர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் வயிறார சாப்பாடு போடும் இறைவனின் சமையலறையை திருவண்ணாமலை கலெக்டர் ஆபீசிலேயே துவங்கி வைத்துள்ளார் கலெக்டர் கந்தசாமி! சுத்தமான, சுகாதார முறைப்படி மதிய உணவும் தயாரிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு வழங்கப்படுகிறது
8 பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகி
சாவல் பூண்டி ஊரைச் சேர்ந்த திமுக நிர்வாகி மா.சுந்தரேசன் பேச்சாளராக அறிமுகமான அபிதா உடன் நெருக்கமானார் மூன்று ஆண்டுகள் காதலித்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர். ஏற்கெனவே மனைவி, மகள், மகன்கள் உள்ள நிலையில் தன்னை விட 40 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டது திருவண்னாமலை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
9. சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி... திருவண்ணாமலை மாணவியின் அபார ஆற்றல்
திருவண்ணாமலையை சேர்ந்த உமாசங்கரின் மகள் வினிஷா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாடங்களை மனப்பாடம் செய்தோமா, மதிப்பெண் பெற்றோமா என்றில்லாமல் சமூகம் மீதான தனது அக்கறையால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் கொண்ட வினிஷா கரித்துண்டுகளுக்கு மாற்றாக சூரிய சக்தியை கொண்டு செயல்படும் இஸ்திரி பெட்டியை வடிவமைத்தார் வினிஷாவின் திறமையை கவுரவிக்கும் பொருட்டு ஸ்வீடன் அரசு பட்டயம், பதக்கம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் பணமும் வழங்கியுள்ளது. இதனை ஸ்வீடன் நாட்டு துணை பிரதமர் இசபெல்லா காணொலி நிகழ்வு மூலம் வழங்கியுள்ளார்.
10. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொலைக்காட்சிகளில் நேரலைகளில் ஒளிபரப்பான காட்சிகளைக் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர்.
இது தான் மக்களே திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் , நேயர்களே நீங்களும் கமெண்டில் திருவண்ணாமலையில் நடந்த , உங்களுக்கு தெரிந்த சம்பவங்களை பதிவிடுங்கள்.