நோட்டாவுக்கு போட்டியா?... பாஜகவுக்கு எதிராக ஒன்று சேருங்கள்... சீமான் பாய்ச்சல்
திருவண்ணாமலை: பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது, ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் தானாக வரவில்லை. 200 ரூபாய் கொடுத்து அவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், நோட்டோவுக்கு கீழே உள்ள பாஜகவை முழுவதுமாக விரட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் சீமான் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது.
இதனால், தேசிய கட்சிளான காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் அதிக தொகுதிகளை கைப்பற்ற மாநில வாரியாக செல்வாக்கு உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகின்றன. மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் , மாநில கட்சிகள் தான் செல்வாக்கு பெற்று ஆட்சியை தீர்மானிக்கும் என்றார்.
முன்னதாக, ஆட்சியில் இருந்தபோது திமுக கிராம சபை நடத்தி இருந்தால் கிராமங்கள் முன்னேறியிருக்கும் என்று விமர்சனம் செய்த சீமான் அனைத்து கட்சிகளையும் சம எதிரியாக பார்த்து தான் தேர்தலில் போட்டியிடுவோம் எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல், நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்றும், வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையை கருத்துக்கணிப்பு மூலம் உருவாக்குகிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார்.