அதிமுகவில் இளைஞர் பட்டாளம் இல்லையாம்... சொல்வது வேறு யாருமல்ல... அதிமுக எம்.எல்.ஏ தான்..!
திருவண்ணாமலை: அதிமுகவில் இளைஞர் பட்டாளம் இல்லை என பொதுவெளியில் பேசி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன்.
அதிமுகவில் இளைஞர்களை தேடி தேடி பிடிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொண்டர்களிடம் உத்வேகம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
உட்கட்சி விவகாரங்களை மேடை அமைத்து பொதுவெளியில் பேசிய செய்யாறு அதிமுக எம்.எல்.ஏ.தூசி மோகன் மீது அக்கட்சியின் தலைமை கடுங்கோபம் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. புயலை கிளப்பிய ஜெர்மனி.. மக்களின் உயிர்தான் முக்கியம்!
செய்யாறு தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தூசி மோகன். எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவில் இருந்து வரும் இவர் மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசக்கூடியவர். அந்தவகையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தூசி மோகன், அதிமுகவில் இளைஞர்கள் இல்லை என ஒரே போடாக போட்டார். மேலும், தேர்தல் பணிகளுக்கு இளைஞர்களை தேடி தேடி பிடிக்கவேண்டி உள்ளதாக குறிப்பிட்டார்.
ஓடி ஆடி வேலை
ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவினர் ஓடி ஆடி கட்சிப்பணிகளில் ஈடுபட்டதாகவும் ஆனால் அவரது மறைவுக்கு பிறகு கட்சிப்பணியாற்ற தொண்டர்கள் மத்தியில் உத்வேகம் இல்லை எனவும் தெரிவித்தார். அதிமுகவுக்கு இளைஞர்கள் ஆதரவு இல்லாதது பெரிய சரிவு எனச் சுட்டிக்காட்டினார். தூசி மோகன் எம்.எல்.ஏ. பேச்சால் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
செயல்பாடு இல்லை
அதிமுகவில் பெயருக்கு தான் நிறைய அமைப்புகள் இருக்கிறதே தவிர, அதில் உள்ளவர்களிடம் செயல்பாடுகள் இல்லை என மேடையில் மைக் பிடித்து உட்கட்சி உண்மையை போட்டுடைத்தார். மேலும், கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிகவில் கூட இளைஞர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளதாகவும் ஆனால் அதிமுகவில் தேட வேண்டிய நிலை தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சி பலவீனம்
அதிமுக எம்.எல்.ஏ. தூசி மோகனின் பேச்சு கட்சித் தலைமைக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பலவீனமாக உள்ளதாக அந்தக் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.