தமிழகத்தையே அசர வைத்த "இறைவனின் சமையலறை".. கலெக்டர் கந்தசாமி எடுத்த புது முயற்சி.. செம வரவேற்பு
திருவண்ணாமலை: "இறைவனின் சமையலறை"... என்பது அதன் பெயர்.. பசியால் வரும் முதியவர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் வயிறார சாப்பாடு போடும் கிச்சனை திருவண்ணாமலை கலெக்டர் ஆபீசிலேயே துவங்கி வைத்துள்ளார் கலெக்டர் கந்தசாமி!
வழக்கமாக, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆபீஸ்களில் நடப்பது வழக்கம்.. தற்போது கொரோனா பீதியால், அந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
எனினும், பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் ஏராளமானோர் தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு தினமும் வந்து செல்கிறார்கள்.
முதியவர்கள்
பெரும்பாலும், பென்ஷன் உள்ளிட்ட உதவிதொகை சம்பந்தமாக முதியவர்களே அதிகமாக வந்து போகின்றனர். நீண்ட தூரங்களில் இருந்து முதியவர்களும், மாற்று திறனாளிகளும் சிரமப்பட்டு வந்து செல்வதால், சில சமயங்களில் இவர்களால் சாப்பிட முடியாத நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.
புது முயற்சி
இதற்காக, இவர்களின் பசியை திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.. அதன்படி, முதியோர், மாற்று திறனாளிகளின் பசியை தீர்க்க ஒவ்வொரு திங்கள் கிழமையும், மதிய உணவு வழங்க முடிவு செய்தார்.. "இறைவனின் சமையலறை" என்ற கிச்சனையும் இதற்காகவே திறந்து வைத்துள்ளார்.
கலெக்டர் கந்தசாமி
கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் ஒரு பகுதியில், இந்த கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது... சுத்தமான, சுகாதார முறைப்படி மதிய உணவும் தயாரிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு வழங்கப்படுகிறது... இந்த சாப்பாடு முற்றிலும் இலவசம்.. நேற்று இந்த மதிய உணவை அங்கிருந்த மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
சாப்பாடு
முதல் நாளிலேயே சாம்பார் சாதம், வெஜிடெபிள் சாதம், தயிர் சாதம் செய்யப்பட்டது.. அதனுடன் கேசரியும் சேர்ந்து பரிமாறப்பட்டது. இந்த முதியவர்களையும், மாற்று திறனாளிகளையும் அழைத்து வந்த உடனிருந்தவர்களுக்கும் சாப்பாடு தரப்பட்டது.. கலெக்டரின் இந்த புது முயற்சி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டதுடன், வாழ்த்துக்களையும் மக்கள் சொல்லி வருகிறார்கள்.. வயிறார சாப்பிட்டு, மனசார கலெக்டரை மனசார வாழ்த்திவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள் முதியவர்கள்!