காணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை மரகதலிங்கத்தை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆய்வு செய்தார்.
வேட்டவலத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், ஐம்பொன்சிலைகள், அம்மனுக்கான தங்க நகைகள் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகதலிங்கம், அம்பாள் தாலி, ஓட்டியாணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனது.
இது குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், ஓராண்டுக்கு முன் இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று ஜமீன் பங்களாவில் வேலை செய்யும் முதியவர் ஒருவர் குப்பை கொட்டும் போது திருடு போன மரகதலிங்கம் அங்கே இருந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீஸார் அதனை வந்து கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
உங்கள் பணம் வேண்டாம்.. நாங்களே வித்யாசாகர் சிலையை சரிசெய்து கொள்கிறேம்.. பாஜகவுக்கு மமதா பதிலடி!
இந்த மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மனோன்மணியம்மன் கோயில் மற்றும் சுற்றியுள்ள இடங்களை ஆய்வு செய்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
தற்போதும் அந்த மரகதலிங்கம், போலீஸாரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மரதலிங்கம் திருடப்பட்ட பின் குறிப்பிட்ட பகுதியில் சல்லடை போட்டு தேடியும் கிடைக்காத நிலையில் இரு வருடங்கள் கழித்து குப்பையில் கிடைத்தது எப்படி என மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருடப்பட்ட மற்ற பொருட்கள் கிடைக்கவில்லை. பிற பொருட்களை விற்க முடிந்தவர்களால் மரகதலிங்கத்தை விற்க முடியவில்லையா. அதனால் தான் குப்பையில் போட்டு சென்றுவிட்டனரா. அப்படி என்றால் திருட்டு வேலையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் போல என மக்கள் சந்தேக கணைகளை தொடுத்து வருகின்றனர்.