திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு... துணிப்பை.. சணல் பையுடன் போனால்.. தங்கம் பரிசு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை, சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசு வழங்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாசலேசுவரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி 10-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் மற்றும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் ஆகியவை நடைபெறும்.
10ம் தேதி நடைபெறும் தீப திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அப்படி வரும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் தீப திருவிழாவின்போது துணிப்பை மற்றும் சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நித்தியானந்தாவுக்கு நாங்கள் தஞ்சம் அளிக்கவில்லை.. அவர் எங்கள் நாட்டில் இல்லை.. ஈக்வடார் மறுப்பு
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் கொண்டுவரக்கூடாது என்பதற்காகவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் துணிப்பை மற்றும் சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.