திருவண்ணாமலை தீபத் திருவிழா: தேரோட்டம் ரத்து, கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை
தீபத் திருநாளன்று அண்ணாமலையார் மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். தீபத் திருநாளன்று அண்ணாமலையார் மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கிரிவலம் செய்ய அனுமதி கிடையாது என்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாத பவுர்ணமியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்தாவது நாளன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும் தீபத் திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகாதீபம் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தேரோட்டம், சாமி வீதி உலா வருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீப திருவிழா உற்சவம்
கார்த்திகை தீபத் திருவிழா குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவானது 17.11.2020 அன்று தூர்க்கை அம்மன் உற்சவத்தில் தொடங்கி 3.12.2020 அன்று சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது.
மலை உச்சியில் மகா தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 20ஆம் தேதியன்று கொடியேற்றப்படும். அதனை தொடர்ந்து 10ஆம் நாள் 29.11.2020 அன்று கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
கோவிலில் சாமி தரிசனம்
இந்த விழாவின் போது 29ஆம் தேதி நடைபெறும் தீபத் திருநாள் தவிர, நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு சவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, முறையான அனுமதிச் சீட்டு பெற்ற பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற அனுமதி கிடையாது
தீபத் திருநாளன்று அண்ணாமலையார் மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 29.11.2020 அன்று பொதுமக்கள், பக்தர்கள் கோவிலில் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்நிகழ்ச்சிகள் தொலைகாட்சி, யூடியூப், திருக்கோயில் இணையத்தளம், அரசு கேபிள் தொலைகாட்சி மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகள் மூலம் ஒளிப்பரப்பாகும்.
அன்னதானத்திற்கு தடை
தீபத் திருவிழா நாட்கள் மற்றும் அதனை தொடர்ந்து வரப்போகும் பௌர்ணமி நாளன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதை மற்றும் நகரப் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வருட தீபத் திருநாளன்று 28.11.2020 முதல் 30.11.2020 வரை சிறப்பு பேருந்துகள் வசதி கிடையாது.