கார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையிலும் அசைவ ஹோட்டல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதிலும் பக்தர்கள் கிரிவலம் வரும் பாதைகளில் கூட அசைவ ஹோட்டல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. கார்த்
திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபத்திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருப்பதால் நான்கு நாட்களுக்கு திருவண்ணாமலை மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவு விடுதிகளை மூடும்படி கோவில் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாக புகழ்பெற்ற இந்து கோவில்கள் உள்ள ஊர்களில், அந்த கோவிலுக்கு அருகாமையிலும், கோவில்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரைக்கும் அசைவு ஹோட்டல்களை நடத்துவதற்கு அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக வைணவ கோவில்கள் உள்ள ஊர்களில் பெரும்பாலும் அசைவ ஹோட்டல்களுக்கு சுத்தமாக அனுமதி கிடையாது.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ள திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் அனைத்து ஹோட்டல்களுமே சுத்த சைவ ஹோட்டல்கள் தான். அந்த அளவுக்கு அங்கெல்லாம் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஆனால், சைவ சமயத்தில் புகழ்பெற்ற சிவாலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்கள் இருக்கும் அனைத்து ஊர்களிலுமே இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அந்த ஊர்களில் எல்லாம் கோவிலுக்கு அருகாமையிலேயே அசைவ ஹோட்டல்கள் வெகு ஜோராக கடையை நடத்துவதுண்டு.
அதே கதை தான் திருவண்ணாமலையிலும் நடந்துகொண்டு வருகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையிலும் அசைவ ஹோட்டல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதிலும் பக்தர்கள் கிரிவலம் வரும் பாதைகளில் கூட அசைவ ஹோட்டல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கிரிவலம் வரும்போது அந்த சிவனின் பஞ்சாட்ஷர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு வரும் வழியில், அவர்களின் மனதை திசை திருப்பும் வகையில் இந்த மாதிரியான அசைவ ஹோட்டல்கள் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது, அனுமதி கொடுத்தவர்களுக்கு தான் புரியும் போல.
அப்படி இருந்தால் பக்தர்கள் எப்படி முழுமனதோடு கிரிவலம் வருவார்கள் என்பது புரியவில்லை. பக்தர்களின் இந்த மனக்குமுறல்களை புரிந்துகொண்டோ என்னவே, இன்று முதல் 4 நாட்களுக்கு அசைவ ஹோட்டல்களை மூடும்படி கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெறும் திருவிழாக்களிலேயே உலகப் புகழ்பெற்றது கார்த்திகை தீபத்திருவிழா தான். 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது,
நாள்தோறும் காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ சுவாமிகளின் வீதி உலாவும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் உற்சவ வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முத்தாய்ப்பாக நடக்கும் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் இன்று நடைபெற்றது. இந்த மகா தீபத்தை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் மலையைச்சுற்றிலும் காத்துக்கிடந்தனர்.
மலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட உடனேயே பக்தர்கள் அனைவரும் மலை உச்சியை நோக்கி கும்பிட்டுவிட்டு, உடனேயே கிரிவலம் வர ஆரம்பித்துவிட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளதால், பக்தர்களின் சவுகரியத்தை முன்னிட்டு, தற்போது கோவில் நிர்வாகம் திருவண்ணாமலையில் உள்ள அசைவு ஹோட்டல்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில் இன்று முதல் 4 நாட்களுக்கு திருவண்ணாமலை மற்றும் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அசைவ ஹோட்டல்கள் அனைத்தையுமே மூட கோயில் நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அனைவருமே நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளதால், திருவண்ணாமலை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.