திருவண்ணாமலை தீபத் திருவிழா: ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு இன்று முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின்போது தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் இன்று முதல் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் தரிசனம் செய்யலாம்.
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் சாமி தரிசனம் அனுமதிக்கப்படுகின்றனர். தீபத்திருவிழா நடைபெறும் 29ஆம் தேதி தவிர டிசம்பர் 3ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 3ஆம் தேதி வரை ஒருநாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். தீபத்திருவிழா நடைபெறும் 29ஆம் தேதி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் http://www.arunachaleswarartemple.tnhrce.in/ என்ற கோவில் இணையதளத்தில் ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதில் கேட்கும் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்பவர்களுக்கு கோவில் நிர்வாகம் நிபந்தனைகள் விதித்து உள்ளது.
முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 59 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கோவிலுக்குள் நுழையும்போது ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டு வர வேண்டும்.
பக்தர்கள் பாரம்பரிய உடை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஆன்லைன் நுழைவு சீட்டு கிழக்கு ராஜகோபுரத்தில் பரிசோதனை செய்யப்படும். தங்கள் சீட்டில் குறிப்பிட்டு இருக்கும் நேரத்தை விட 15 நிமிடத்திற்கு முன்பாகவே வர வேண்டும். காலதாமதம் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
கோவிலின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவி வைக்கப்பட்டு இருக்கும். பக்தர்கள் பரிசோதனைக்கு பின்னர் நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். சிலைகளை தொட அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.