கடனில் தத்தளித்த திமுக மாவட்டச் செயலாளர்... ஓய்வு கொடுத்த கட்சித் தலைமை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து சிவானந்தத்திடம் இருந்து பதவியை பறித்து தரணிவேந்தன் என்பவரை மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ளது திமுக தலைமை.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தத்திற்கு ரூ.5 கோடி கடன் இருந்ததால் அவரால் கட்சிப்பணிகளுக்கு கூட பணம் செலவழிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு தயவால், கடனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் சிவானந்தம்.
என்ன செய்வது?.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை! v
வட்டி, அசல்
சிவானநத்திற்கு கடன் கொடுத்த கரூரை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக அவரிடம் வட்டியும், அசலும் வேண்டும் என பலமுறை கேட்டுவந்தது. ஆனால், வாங்கிய கடனை திருப்பிச்செலுத்தும் நிலையில் சிவானந்தம் இல்லை. இதில் மாவட்டச் செயலாளராக வேறு உள்ளதால் தனது நிலையை பற்றி வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வந்தார். தனக்கிருந்த கடும் நிதி நெருக்கடியால் அண்மைக்காலமாக அவரால் கட்சிப்பணிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
கரூர் நிதி நிறுவனம்
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சிவானந்தம் தனது மகன் பாபுவை ஆரணி தொகுதியில் நிறுத்தினார். தேர்தல் செலவுக்காக தனக்கு வேண்டப்பட்ட அனைவரிடமும் அப்போது கடன் கேட்டுப்பார்த்தார், யாருக் கொடுக்கவில்லை. கல்வித்தந்தையான எ.வ.வேலுவும் கைவிரித்துவிட்டார். செலவு செய்யமுடியும் சீட் கொடுங்க என நீங்கதானே கேட்டீங்க, நீங்களே பாத்துகங்க என அப்போது வேலு கூறிவிட்டார். இதையடுத்து, கரூரில் அதிக வட்டிக்கு பணம் கிடைத்தாலும் பரவாயில்லை என நினைத்து தனது சொத்துக்கள் சிலவற்றை அடமானம் கொடுத்து ரூ.5 கோடி கடன் பெற்றார் சிவானந்தம்.
விசாரணை
ஆனால் சிவானந்தத்தின் மகன் துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் தோல்வியை தழுவியதால் சிவானந்தத்தின் தலையில் பேரிடி இறங்கியது. மொத்த கடனையும் அடைப்பதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். பற்றாகுறைக்கு மாவட்டச் செயலாளராக உள்ளதால் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தவும் நிதியின்றி தடுமாறினார். இதனிடையே சிவானந்தத்திற்கு கடன் கொடுத்த கரூர் நிதி நிறுவனம் திருவண்ணாமலை காவல்துறையினரிடம் புகார் அளித்தது. அந்த புகாரின் அடிபடையில் அவர்களும் சிவானந்தத்தை அழைத்துச்சென்று விசாரித்தனர்.
புதிய நிர்வாகி
பின்னர் எ.வ.வேலு தலையிட்டு பஞ்சாயத்து செய்து சிவானந்தத்தை கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியுள்ளார். இதனிடையே திமுக மாவட்டச் செயலாளர் பணமோசடியில் கைது என செய்திகள் வந்ததை தொடர்ந்து, அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தரணிவேந்தன் என்பவரை மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ளார் ஸ்டாலின். தரணிவேந்தனை பொறுத்தவரை எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். அவர் நில் என்றால் நிற்பார், உட்காரு என்றால் உட்காருவாருராம்.