திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி - பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை நீடிக்கிறது.
திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படாத காரணத்தால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே பிரபல கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டுள்ளது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கால்களை நீரில் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகம், புதுவையில் முழு ஊரடங்கு.. அன்லாக் 4.0 பெயரில் தடை போட்ட மத்திய அரசு.. முழு விவரம்!
முக கவசம் அணிந்து வரவேண்டும். தனி மனித இடைவெளியுடன் தரிசனம் செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் ஒலிபெருக்கியில் அறிவிப்புகளை செய்து கொண்டுள்ளனர். சாமி சிலை மற்றும் கோவில் பகுதிகளை தொடக்கூடாது. தேங்காய், பழம், பூ கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோர்,உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், சுவாசப் பிரச்சனை இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பவுர்ணமி கிரிவலம் கொரேனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டது. கடந்த பங்குனி மாத பவுர்ணமி முதல் தற்போது பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்று ஆவணி மாத பவுர்ணமி காலை 10.10 மணிக்கு தொடங்கி, நாளை 2ஆம் தேதி காலை 11.05 மணிக்கு பவுர்ணமி நிறைவடைகிறது.
அண்ணாமலையார் கோவில் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்பட்டாலும் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிவல பாதையில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது போல கிரிவலம் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.