டீ குடித்த இளைஞர்.. விரட்டிய கும்பல்.. பஸ்சில் தாவி ஏறியும்.. சரமாரி வெட்டு.. பதற வைக்கும் கொலை!
திருவண்ணாமலை: டீ குடித்து கொண்டிருந்த இளைஞர்.. தன்னை கொல்ல வந்த கும்பலிடம் இருந்து தப்பித்து கொள்ள ஓடும் பஸ்ஸில் ஏறினார். ஆனால் விரட்டி வந்த கும்பலும், பஸ்ஸுக்குள்ளேயே ஏறி இளைஞரை கை, தலை, கால் என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டது!
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 28 வயது என்ஜினியர். காஞ்சிபுரத்தில் பழைய கார்களை வாங்கி சேல்ஸ் பண்ணும் வேலையை பார்த்து வருகிறார்.
இவருக்கு கல்யாணம் செய்ய வீட்டில் முடிவு செய்தனர். இதற்காகவே இவரது பெற்றோர், செய்யாறு டவுன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பெண் தேடி வந்தனர். தினமும் செய்யாறு வந்து போக முடியாது என்பதால், சதீஷ்குமார் காஞ்சிபுரத்திலேயே தங்கி உள்ளார்.
இந்நிலையில், அம்மா, அப்பாவை பார்க்க பைக்கில் சதீஷ்குமார் வந்து கொண்டிருந்தார். சுந்தரி சினிமா தியேட்டர் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி விட்டு, அங்கு டீ குடித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், காரில் 10 பேர் கும்பல் கத்தி, அரிவாளுடன் சதீஷ்குமாரை நோக்கி ஆவேசத்துடன் வந்தனர்.
இதை பார்த்து அதிர்ந்த சதீஷ்குமார், டீ கிளாஸை அங்கேயே போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தார். ஆனால், அந்த கும்பல் சதீஷ்குமாரை விரட்டி கொண்டே வந்தது. அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி ஒரு பிரைவேட் பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. உடனே சதீஷ்குமார் உயிரை காப்பாற்றி கொள்ள அந்த பஸ்ஸில் ஏறினார். ஆனால் அந்த கும்பலும் அதே பஸ்ஸில் ஏறிகொண்டது.
பஸ்சுக்குள் சதீஷ்குமாரை சுற்றி வளைத்து, கை, தலை என சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதனை கண்ட பயணிகள், கண்டக்டர், டிரைவர் என எல்லோருமே அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். உடம்பெல்லாம் வெட்டு காயத்துடன், சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் பஸ்ஸுக்குள்ளேயே சரிந்து விழுந்தார். ஆனால் அந்த கும்பல் அதற்குள் கீழே இறங்கி வந்த காரிலேயே ஏறி தப்பி சென்றுவிட்டது.
பயணிகள் உடனடியாக செய்யாறு டவுன் போலீஸுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து சதீஷ்குமாரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் செய்யாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சதீஷ்குமாரை கொன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. என்ன முன்விரோதம் என்றும் தெரியவில்லை. அதனால் அவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது. உறவினர்களிடையே சொத்து தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பி ஓடியவர்களை 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.