ரோடா இது.. சாலையை சீரமைக்க கோரும் பொதுமக்கள்.. திருவாரூர் மறியலில் குதித்த 10 கிராமங்கள்
Recommended Video
திருவாரூர்: தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திருவாரூர் அருகே, 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் - திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு விபத்துகளில் பலியாகியுள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் கோரிக்கை நிறைவேறாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடராம் கொண்டான் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழவனக்குடி, மொச்சக்குடி, சீனிவாசபுரம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கியதால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.
10 கிராம மக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் - நாகை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் ஏராளமான பேருந்துகள், கனரக லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் காத்து கிடக்கின்றன.