தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்... அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்..!
திருவாரூர்: தமிழகத்தில் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமாகியுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறையுடன் வேளாண் துறையையும் அவர் கூடுதலாக கவனித்து வரும் சூழலில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இந்த தகவலை கூறியுள்ளார்.
மேலும், புயல் சேத நிவாரணத் தொகையை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற்று விவசாயிகளுக்கு முதலமைச்சர் வழங்குவார் என்றும் இது குறித்து ஸ்டாலினுக்கு தாம் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்புக்குப் பிறகு இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும்... வானிலை மையம் அறிவிப்பு..!
இதனிடையே டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் நேற்று சென்னையில் ஆய்வு செய்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தை பார்வையிட்டனர். அவர்கள் டெல்லி திரும்பிய பிறகு மத்திய அரசிடம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.