ஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்!
Recommended Video
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உண்மையான காரணத்தை சொல்லி விடுப்பு கடிதம் கொடுத்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எடுத்தவுடன் அடுத்த நாள் வரும் போது விடுப்பு கடிதம் கொண்டு வர அனைத்து பள்ளிகளும் வலியுறுத்துகின்றன. அப்போதுதான் அந்த மாணவர் தன்னிச்சையாக விடுப்பெடுத்தாரா இல்லை பெற்றோர் சம்மதத்துடன் விடுப்பு எடுத்துள்ளாரா என்பதை தெரிந்து கொள்வதற்காகவும்தான்.
இந்த லெட்டர்களில் நாம் வழக்கம் போல் "I am suffering from fever, stomach pain " இப்படி உடல்நிலையை காரணம் காட்டி எழுதுவது வழக்கம். அது போல் இன்னும் சிலர் ஏற்கெனவே இறந்த பாட்டி, தாத்தா மீண்டும் மீண்டும் இறந்துவிட்டார் என்பது போல் காரணம் சொல்வர்.
விடுப்பு
ஆனால் உண்மையை பார்த்தோமேயானால் பள்ளி செல்ல சோர்வாக இருந்திருக்கும், போர் அடித்திருக்கும், வெறுப்பாக இருந்திருக்கும். ஆகவே இன்று ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம் என நினைப்பர். யாரும் உண்மையான காரணத்தை சொல்ல மாட்டோம்.
விடுப்பு கடிதம்
ஆனால் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் உண்மையான காரணத்தை கூறி விடுப்பு எடுத்துள்ளான். அந்த பள்ளியில் படித்து வரும் தீபக் என்ற மாணவர்தான் இதுபோன்ற விடுப்பு கடிதத்தை எழுதியுள்ளார்.
உடல் சோர்வு
இவர் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணை எடுத்துள்ளார். இந்த நிலையில் தீபக் நேற்று முன் தினம் விடுப்பு கடிதத்தை எழுதியிருந்தார்.அதில் அவர் குறிப்பிடுகையில் நான் நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை இரவு முழுவதும் கண் விழித்து பார்த்தேன். இதனால் உடல் சோர்வாக உள்ளது.
வகுப்பு ஆசிரியர்
எனவே எனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஒரு நாள் லீவுக்காக பொய்களை கூறும் மாணவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மாணவனா என்ற வகுப்பு ஆசிரியர் மணிமாறன் வியந்தார்.
பாராட்டுகள்
இந்த நிலையில் உண்மையை கூறி விடுப்பு எடுத்த மாணவன் எழுதிய கடிதத்தை அவரது படம், விடுப்பு கடிதத்துடன் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டார். இதையடுத்து மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.