லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.. திருவாரூரில் கோலாகல ஆழித் தேரோட்டம்
சென்னை: உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறுவது ஆழித் தேரோட்டம். திருவாரூர் தேர் அழகு என்பது பக்தர்கள் கருத்து. திருவாரூர் தேரோட்டம், உலகப் புகழ் பெற்றது.
பங்குனி திருவிழாவையொட்டி பிப்ரவரி 22ம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற நிலையில், தொடர்ச்சியாக, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமையான இன்று காலை 7 மணியிலிருந்து 7.25 க்குள் வடம் பிடிக்கப்பட்டு, தொடங்கிவைக்கப்பட்டது.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் கோவிலில் ஆழித் தேரோட்டத்தை தரிசனம் செய்து வருகின்றனர். நான்கு ரதவீதிகள் வழியாக இந்த தேர் ஊர் வலம் செல்கிறது. திருவாரூர் தேர் 96 அடி உயரம், 30 அடி அகலம், 300 டன் எடை கொண்டதாகும்.
திருவிழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன. தேரைச் சுற்றிலும், மொத்தம் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.