புற்றுநோயால் பாதித்த நெல்ஜெயராமன்... மருத்துவமனையில் சந்தித்து தெம்பு கொடுத்த நடிகர் சூரி!
Recommended Video
திருவாரூர்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை விவசாயி நெல்ஜெயராமனை நடிகர் சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். எல்லா குடும்பத்திற்கும் யாராவது ஒருவர் முக்கியமாக இருப்பார்கள் ஆனால் எல்லா குடும்பத்தினருக்கும் நெல் ஜெயராமன் ஐயா முக்கியம் என்று நடிகர் சூரி உருக்கமான தெரிவித்தார்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களின் பயன்பாடு குறைந்து புது ரக நெல்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவின. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர் பண்டைய கால விவசாய முறை குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த 'நெல்' ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார்.
பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நடத்தியவர் நெல் ஜெயராமன். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார். இவர் மீட்டெடுத்த 169 வகை நெல்களும் தற்போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த ஜெயராமன் தற்போது புற்றுநோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் ஆர்வலர்கள், விவசாய அமைப்பினர் நெல் ஜெயராமனை சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூரி நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். அப்போது அவர் உருக்கமாக நெல் ஜெயராமன் பற்றி பேசியது பார்ப்பவர்களுக்கு நெகிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. வீடியோவில் பேசும் சூரி, எல்லா குடும்பத்திற்கும் யாராவது ஒருவர் மட்டுமே முக்கியமானவர்களாக இருப்பார்கள் ஆனால் நெல் ஜெயராமன் ஐயா அனைத்து குடும்பத்தினருக்கும் முக்கியமானவர், அவர் எங்களுக்கு வேண்டும் அவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.