நடைபெறுமா திருவாரூர் இடைத் தேர்தல்?... தேர்தலை ஒத்திவைக்க கட்சிகள் வலியுறுத்தல்
திருவாரூர்: கஜா புயல் நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பிறகு இடைத்தேர்தலை நடத்தலாம் என்று திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
திருவாரூர் இடைத் தேர்தலை நடத்த எதிர்ப்பு வலுத்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு அழைப்பு மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் விடுத்தார்.
இதற்கிடையே, திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை தர திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினரின் கருத்துகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். திருவாரூரில் திமுகவை விழ்த்தி, நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாயையை உருவாக்கலாம் என்ற மத்திய - மாநில அரசுகள் பகல்கனவு காண்கிறார்கள் என்றும் எனவே இம்முறையும் கருணாநிதியே மீண்டும் போட்டியிடுகிறார் என்ற விழிப்புணர்வோடு செயலாற்றுவோம் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
தேர்தல் ஆணையர் தகவல்
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த ஸ்டாலின் கோரிக்கை தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியே முடிவெடுப்பார் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார். திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை தர திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் கருத்து
அமமுக வெற்றி பெறும் என்ற பயத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின், முரணான தகவலை தெரிவித்து வருவதாக டிடிவி தினகரன் கூறினார்.
கட்சிகள் கோரிக்கை
கஜா புயல் நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பிறகு இடைத்தேர்தலை நடத்தலாம் என்று திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதனால், இடைத் தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.