திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தொல்லியல் துறை அதிகாரிகள்.. சிலைகள் குறித்து விறுவிறு ஆய்வு!
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தொல்லியல் துறையினர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மூன்றாம் கட்ட ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 965 சிலைகள் ஆய்வு செய்யபட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலிலுள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் மூன்றாம் கட்ட 3ம் நாள் ஆய்வு இன்று காலை தொடங்கியுள்ளது. இங்கு திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 4539 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் அளவீடுகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்த நிலையில் 738 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சிலைகள் பத்திரம்
தென் மண்டல தொல்லியல்துறை இயக்குனர் நம்பிராஜன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் தலைமையில் 40 தொல்லியல் துறையினர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஐம்பொன் சிலைகள்
நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட ஆய்வு தொடங்கிய நிலையில் முதல் நாள் 91 சிலைகளையும் இரண்டாம் நாள் 136 சிலைகளின் தொன்மைத்தன்மை மற்றும் அளவீடுகள் கணக்கெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக ஆய்வு தொடங்கியது.
15 கோவில்களின் சிலைகள்
இஞ்சிகுடி திருவாரூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட 15 கோவில்களின் ஐம்பொன் சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இந்த மூன்றாம் கட்ட ஆய்வுப்பணி இன்றுடன் முடிவடைகிறது என சிலை கடத்தல் பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பழம்பெரும் சிலைகள்
மேலும் நீதிமன்ற உத்தரவுபடி கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பதில் உள்ள முருகன் சிலை மற்றும் அம்மன் சிலை இரண்டு சிலைகளின் தொன்மை தன்மை குறித்தும் இன்று ஆய்வு செய்யப்பட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.