என் மகன் விடுதலையை வைத்து அரசியல் செய்கிறார்கள்- அற்புதம்மாள் பரபரப்பு பேட்டி
Recommended Video
திருவாரூர்: ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யாததற்கு அரசியலே காரணம் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.
திருவாரூரில் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கான கருத்தரங்கம் நடந்தது. இதில் அற்புதம்மாள் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு, ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும். அப்போதுதான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும்.
அரசை குறை கூற முடியாது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அந்த அரசை குறை கூறவே முடியாது.
கையெழுத்திடவில்லை
7 பேரை விடுதலை செய்யாததற்கு காரணம் அரசியல்தான். எனது மகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணை அதிகாரியும் உச்சநீதிமன்றமும் தெரிவித்த பிறகு ஆளுநர் அந்த கோப்பில் ஏன் கையெழுத்திடவில்லை என்பது தெரியவில்லை.
விடுதலை
சட்டத்தை மதித்து 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை இனியாவது விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார் அற்புதம்மாள்.
ஆளுநரின் பார்வைக்கு
குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர்களது விடுதலை குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநரின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
விவாதம்
ஆனால் அதில் இன்னும் ஆளுநர் கையெழுத்திடவில்லை. எனினும் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 மாணவிகள் சாவுக்கு காரணமாக இருந்த 3 பேரை மட்டும் விடுதலை செய்து ஆளுநர் கையெழுத்திட்டது பெரும் விவாதத்துக்குள்ளானது.