அடிமை போல் நடத்துகிறார்கள்... பொறுத்துக்க முடியாது... லேட்டாக பொங்கும் தம்பிதுரை!
Recommended Video
திருவாரூர்: அதிமுகவினரை அடிமை போல பாஜக நடத்துவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே உள்ள திருப்பாம்புரம் கோவிலில் தம்பிதுரை சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: உச்சநீதிமன்றம் காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என சொன்னதையும் பொருட்படுத்தாமல் எதற்காக மத்திய அரசு மேகதாது அணைக்கு அனுமதி கொடுத்தது.
பாஜக ஏற்கவில்லை
இதனை கண்டித்து அதிமுகவை சேர்ந்த 34 எம்பிக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர் அவர்களை உள்ளே வரவழைக்க வேண்டும் என துணை சபாநாயகர் என்ற முறையில் நான் வேண்டுகோள் விடுத்தேன் அதனை பாஜகவினர் ஏற்கவில்லை.
மத்திய அரசு வஞ்சிக்கிறது
அதுபோல் தமிழக மக்களுக்காக ஜெயலலிதாவின் வழியில் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்னால் நீட் தேர்வை மத்திய பாஜக அரசு அனுமதித்தது. கஜா புயலுக்கு 15 ஆயிரம் கோடி நிதி கேட்டும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. எல்லா வகையிலும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
எந்த விதத்தில் நியாயம்
தமிழகத்தில் ஒரு உறவு வைக்க வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் உதாசீனப்படுத்துகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். பொன். ராதாகிருஷ்ணன் அதிமுகவை ஊழல் கட்சி என்றார். தமிழிசை சௌந்தரராஜன் திராவிட கட்சிகளை அகற்றுவோம் என்றார். அமித்ஷா தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடப்பதாக கூறினார்.
பொறுத்துக் கொள்ள மாட்டோம்
இப்படி விமர்சிக்க அவர்களுக்கு உரிமை இருக்கும்போது என்னைப் போன்றோருக்கும் எங்களுடைய கட்சியின் நிலைப்பாடு குறித்து சொல்ல உரிமை இருக்கிறது. எங்களை பொறுத்தவரையில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் நல்ல உறவு முறை இருக்கிறது. ஆனால், பாஜகவில் உள்ள தலைவர்கள் எங்களை கொச்சைப்படுத்துகின்றனர். அடிமை போல நடத்துகின்றனர். இதனை விரும்பவில்லை, இதனை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்.