2வது நாளாக மத்திய குழு ஆய்வு.. திருவாரூர் கிராமங்களில்... பாதிக்கப்பட்ட மக்கள் குமுறல்
திருவாரூர்: திருச்சி, தஞ்சாவூரைத் தொடர்ந்து திருவாரூரில் மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கஜா புயலின் கோர தாண்டவத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ஜாம்பவானோடை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக சேதத்தை சந்தித்துள்ளன. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காமல் ஒரு வாரமாக மக்கள் தவித்து வந்தார்கள். நெல் விளையும் பூமியில் உணவுக்கூட கிடைக்காமல் மக்கள் திண்டாடியது அனைவரின் மனதையும் கணக்க செய்தது.
நேற்று திருச்சியில் ஆய்வு பணியை தொடங்கிய மத்தியக் குழுவினர், இன்று இரண்டாவது நாளாக தஞ்சாவூர் மாவட்டத்தில் புதூர், புலவன்காடு, திவ்வியக்காடு, ஆலடிக்குமுளை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக மின்சார சீரமைப்புக்கு ரூ. 200 கோடி ஒதுக்கி உள்ளது. வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கிற விவசாயிகள் இழப்பீடுக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் பல கிராமங்களுக்கு போதிய உதவிகள் போய் சேராமல் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இரண்டாவது நாளாக ஆய்வு பணியை மேற்கொண்டுள்ள மத்திய குழுவினர், திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை பகுதிகளுக்கு சென்றனர். அப்போது மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.