முதல்வர் எடப்பாடிக்கு மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் உள்ளதா.? தமிழக விவசாயிகள் சங்கம்
திருவாரூர்: புதுவை முதல்வர் நாராயணசாமியை போல, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பேன் என சொல்லும் தைரியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா என தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இருந்து தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க அதிக அளவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து பொதுமக்களும், விவசாயிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருந்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல, மத்திய மற்றும் மாநில அரசுகள் பாராமுகமாக உள்ளன.
சொந்த மக்களை காக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தமிழக அரசு, மக்கள் விரும்பும் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என ஒற்றை வரியை திரும்ப திரும்ப சொல்லி நாட்களை தான் கடத்துகின்றது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வரும் 12-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் துவங்கி ராமேஸ்வரம் வரையிலான 596 கி.மீ தொலைவிற்கு பிரம்மாண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் ஏராளமான அரசியல் கட்சிகள் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் திருவாரூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் செயல்படுத்தப்பட்டால், மனிதனின் ஆதார தேவைகளான நிலம், நீர், உணவு போன்றவை காணாமல் போயவிடும் என எச்சரித்தார்.
ஆனால் இது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுவதை கூட அரசு தடை செய்கிறது. காவல்துறையை ஏவிவிட்டு தங்களை அடக்க முயற்சிக்கிறது என சாடினார்.
மத்திய அரசு அடாவடித்தனமாக செயல்பட்டு இந்த பேரழிவு திட்டத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சிக்கிறது. புதுச்சேரியில் இந்த திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என மாநில முதல்வர் நாராயணசாமி தைரியமாக அறிவித்துள்ளார். மேலும் ராணுவமே வந்தாலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதுவையில் அனுமதி இல்லை என கறாராக கூறியுள்ளாரே.
தமிழக முதல்வரும் இவ்வாறு மத்திய அரசை எதிர்த்து அறிவிப்பு வௌியிடுவாரா? அந்த துணிச்சல் அவருக்கு இருக்கிறதா என விவசாயிகள் சங்கம் சார்பாக தாம் இந்த கேள்வியை முன்வைப்பதாக சண்முகம் பேசினார்.