திருவாரூரில் பரபரப்பு.. தேரில் இருந்து தவறி விழுந்து குருக்கள் மரணம்.. திருவிழாவில் சோகம்
கோயில் திருவிழாவில் தேரில் இருந்து விழுந்து அர்ச்சகர் உயிரிழந்தார்
திருவாரூர்: தீபாராதனை காட்டுவதற்காக தேர் மீது ஏற முயன்ற கோயில் அர்ச்சகர், தவறி விழுந்து உயிரிழந்தார். கோயில் திருவிழாவில் நடந்த இந்த சோக சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடிப்பூர திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலாம்பாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் நிறைய பேர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரினை கொண்டதுதான் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேர். இந்த கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வடம் பிடித்தனர்
தொடர்ந்து நடைபெற்ற ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. மாலை 6 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் நிறைய பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
குப்புற விழுந்தார்
தேர்கோயிலுக்கு வந்து சேர இரவு ஆகிவிட்டது. அப்போது, தீபாராதனை செய்வதற்காக முரளி என்ற 56 வயது கோவில் தலைமைக் குருக்கள் தேர் மீது ஏறினார். ஆனால் நிலை தடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்துவிட்டார். இதில் முரளிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விசாரணை
உடனடியாக அங்கிருந்தோர் குருக்களை மீட்டு திருவாரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் குருக்கள் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
உயிரிழந்த முரளி, பரம்பரை பரம்பரையாக குருக்கள் குடும்பத்தின் அடிப்படையில் இந்த கோவிலில் வேலை பார்த்து வந்தவராம். இவரது தாத்தா, அப்பாவுக்கு பிறகு முரளி தலைமை குருக்களாக பொறுப்பேற்றார். அதுவும் சின்ன வயசிலேயே இந்த பணிக்கு வந்துவிட்டார். இவரது மகன், சகோதரர்களும் குருக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.