நீச்சலடித்து ஓடி வந்த சிறுவன்.. எதற்காக தெரியுமா.. பதற வைக்கும் டெல்டா காட்சி
தண்ணீரில் தத்தளித்தபடியே வந்து உணவு வாங்கி சிறுவன் சாப்பிட்டான்.
திருவாரூர்: நமக்கு சாப்பாடு எப்போ போடுவாங்க என்று எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சின்ன ஜீவனின் அவல காட்சி இது!!
சொந்த வீடு வாசல், நிலபுலன்கள் வைத்திருந்த மக்கள்தான் இன்னமும் நிர்க்கதியாக நின்று கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ மாவட்டங்களில் உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி வராதா என்று ஏங்கி கிடக்கிறார்கள் மக்கள்.
சாப்பாடு வரும் வண்டி தூரத்தில் தெரிந்தாலும் அதை அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. புயல் ஒரு கொடூரம் கொன்றால், இதுவும் ஒரு கொடூரம்தான்!! எல்லோருக்கும் நிவாரண முகாம்கள் உள்ளன. ஆனால் நிவாரண பொருட்கள் முழுமையாக இல்லை. சில இடங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்லக்கூட முடிவதில்லை.
மஞ்சவாடி
திருவாரூர் செல்லும் வழியில் ஆலத்தம்பாடி என்ற பகுதிக்கு அடுத்து மஞ்சவாடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியே நிறைய உணவு பொருட்களை சேகரித்து கொண்டு ஒரு வண்டி சாலையில் போகிறது. வேறு எங்கோ முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அந்த வண்டியில் உணவை எடுத்து சென்று கொண்டிருந்தார்கள்.
நீந்தி சென்றான்
அப்போது பல நாள் சரியாக சாப்பிடாத ஒரு சிறுவன், காதடைக்கும் பசியுடன் தூரத்தில் அந்த சாப்பாடு வண்டி கடந்து செல்வதை பார்க்கிறான். வண்டியை மறித்து வாங்கலாம் என்றால் தூரமாக இருக்கிறது சாலை. அதுவும் இல்லாமல் குறுக்கே குளம்போல் நீர் பெருகி கிடக்கிறது. பசியின் கொடுமை, அந்த தண்ணியிலேயே படாரென குதித்து விட்டான் சிறுவன். மெதுவாக நீந்தி நீந்தி சென்று அந்த சாப்பாட்டை வாங்க வருகிறான்.
சாப்பாடு வரவில்லையா?
சிறுவன் அந்த கம்மாய் போன்ற நீரில் தத்தளித்து வருவதை பார்த்த, அந்த சாப்பாடு வண்டி அங்கேயே நின்றுவிட்டது. சிறுவனுக்காக வண்டி நிறுத்தப்பட்டது. சட்டைகூட போடாமல் மூச்சிறைக்க ஓடிவந்தான் சிறுவன். சாப்பாடு வேண்டுமா என்று கேட்க, ஆமாம் என்கிறான். "உங்கள் ஊருக்கு சாப்பாடு வருவதில்லையா?" என்று கேட்டால், "இல்லை" என்று பசியுடன் சிரித்தபடியே சொல்கிறான்.
சாப்பாடு வேண்டும்
இதைக் கேட்டு அதிர்ந்தனர் அந்த வண்டியில் இருந்தோர். இதையடுத்து அவனுக்கு ரோட்டோரம் சாப்பாடு தருகிறார்கள். சிறுவன் சாப்பிடுவதை பார்த்ததும், கம்மாய்க்கு அந்த பக்கம் இருந்து இதை பார்த்தார்கள். அதில் நிறைய பெண்களும் இருந்தார்கள். அவர்களால் தண்ணீருக்குள் குதித்து நீச்சலடித்து வரமுடியாது என்பதால் அங்கிருந்தே "எங்களுக்கு சாப்பாடு வேண்டும்" என்று கேட்டார்கள்.
கஜாவின் கோரம்
இதை கேட்டதும், வேறு எங்கேயோ கொண்டு போன சாப்பாட்டினை பல நாள் அரைகுறையாக வயிற்றோடு கிடக்கும் இந்த கிராம மக்களுக்கு எடுத்து கொடுத்தார்கள். இந்த கிராமத்திற்கு இதுவரை நிவாரண உதவிகள் போகவில்லையாம். நிறைய பேர் பசியால் கிடக்கிறார்களாம். நிவாரண உதவியே போய் சேர முடியாத நிலையில் கிராமத்தின் பாதைகள் படர்ந்து கிடக்கிறது. கஜாவின் கோரம் எவ்வளவு என்பது இந்த சிறுவனின் முகத்திலேயே பளிச்சென தெரிகிறது.