ராஜன் செல்லப்பாவை போல பல அமைச்சர்கள் உள்ளுக்குள் குமுறுகிறார்கள்.. திவாகரன் தடாலடி
மன்னார்குடி: "தினகரன் ஒரு அரசியல் கோமாளி... ஒரு அழிவுச்சக்தி... ஒரு மூட்டை பூச்சி... அதான் மக்கள் நசுக்கி எறிந்து விட்டனர் என்று திவாகரன் சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளார். மேலும் ஒற்றை தலைமை தான் வேண்டுமென கூறியிருப்பது சரியான கருத்து, அவரை போல நிறைய பேர் குமுறுகிறார்கள் என்றும் ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
அண்ணா திராவிடர் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுச்செயலாளர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய தேர்தல் ஆணையத்தால் போன வாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எங்கள் கட்சி. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதித்தல், எட்டு வழிச்சாலை திட்டம் போன்றவற்றின் ஆபத்து, அபாயத்தை உணராமல் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அமைச்சர்களும் காவடி தூக்குகிறார்கள். இதற்கு எம்எல்ஏக்களும் துணை போகிறார்கள்.
தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி... முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு
அதிமுக
எப்போது ஜெயலலிதா மறைந்தாரோ, அப்போதே அதிமுகவுக்கு நெருக்கடி தொடங்கி விட்டது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் சொந்தங்களுக்கே சீட் தரப்பட்டது. ஆளும் கட்சி என்ற ஒரு தகுதி தவிர வேறு எதுவுமே அதிமுகவுக்கு இல்லை.
இறங்கு முகம்தான்
சொல்லி வைத்தது போல வெறும் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதுக்கெல்லாம் அந்த கடவுள்தான் பதில் சொல்லணும். எப்படி இருந்தாலும் இது அதிமுகவுக்கு இறங்குமுகம்தான்.
மூட்டை பூச்சி
தினகரன் ஒரு அரசியல் கோமாளி. சசிகலா சிறைக்கு செல்ல காரணமே அவர்தான். அவர் ஒரு அழிவுச்சக்தி. அவரை நம்பியவர்களை ஆட்டுமந்தை போல் நடத்தினார். அதிலிருந்து ஒவ்வொருவரும் வேறு வேறு கட்சிகளுக்கு செல்ல காரணமே தினகரன்தான். ஒரு மூட்டை பூச்சி. அதனால்தான் மக்கள் அவரை நசுக்கி எறிந்து விட்டனர்.
குற்றச்சாட்டு
அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டுமென ராஜன் செல்லப்பா கூறியிருப்பது சரியான கருத்து. அவர் மட்டுமில்லை.. அவரை போல பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மனக்கசப்பில்தான் இருக்கிறார்கள். நான்கு அமைச்சர்கள்தான் தமிழக அரசை ஆட்டி படைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒற்றை தலைமை பிரச்சனை குறித்து விவாதிக்க உடனடியாக பொதுக்குழுவை கூட்டி அதில் தொண்டர்களின் கருத்தை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டும்" என்றார்.