தினகரனை மன்னிக்கவே மாட்டேன்.. கிச்சன் கேபினெட் நடத்துகிறார்.. தினகரன் மீது பாயும் தாய்மாமன் திவாகரன்
திருவாரூர்: டிடிவி தினகரனை மன்னிக்கவே மாட்டேன் என தாய்மாமனான திவாகரன் பாய்ந்துள்ளார்.
திருவாரூரில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் திவாகரன் மரியாதை செலுத்தினார். மேலும் கட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் அண்ணாவின் காலகட்டத்தில் மிகவும் பொருத்தமாக கட்சியை தொடங்கியுள்ளோம். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு ரூ. 6000 என்ற தொகை சிறியதாக உள்ளதை தவிர மற்ற அம்சங்கள் சிறப்பாக உள்ளது.
உண்மை
தேர்தலை மையப்படுத்தி பட்ஜெட் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் நலன் சார்ந்ததாகவே உள்ளது. அமமுகவில் இருந்து தங்கத்தமிழ்செல்வன் கட்சி தாவுகிறார் என்பது உண்மையா என எனக்கு தெரியவில்லை. ஆனா ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும்.
போட்டி
தினகரன் அனைவரையும் இம்சைப்படுத்தி வருகிறார். கிச்சன் கேபினெட் நடத்துகிறார். தினகரன் நடத்தும் அமமுக ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளது. கருத்துக் கணிப்பில் அதிமுகவுடன் அமமுக சமமாக போட்டியிடுவதாக அதன் நிர்வாகிகள் கூறுவதை ஏற்க வேண்டியதில்லை.
சசிகலா
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய எனது கட்சி தடையாக இருக்காது. பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
வேளாண் மண்டலம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாய பகுதியான காவிரி டெல்டாவில் செயல்படுத்த வேண்டியதில்லை. இதனை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார் திவாகரன்.