ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரா கருத்து வேணாம்.. களத்துக்கு வாங்க.! அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வேறுபாடுகளை மறந்து, அனைத்து அரசியல் கட்சியினரும் களமிறங்கி குரல் கொடுக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவாரூரில் தமிழர் தன்மான பேரவை சார்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரழிவு 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தால் மட்டும் போதாது.
இவ்விவகாரத்தில் கருத்து மட்டுமே தெரிவித்தால் ஒரு மாற்றமும் ஏற்படாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து களத்திற்கு வந்து போராட வேண்டும். 2013-ம் ஆண்டில் இருந்தே மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்புஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து வருகிறது.
ஆனால் மத்திய அரசோ காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறது என புகார் தெரிவித்தார். தமிழகம் அழிவதைப் பற்றி மத்திய அரசுக்கு துளி கூட கவலையில்லை என்பது வேதனையளிப்பதாக கூறினார்.
புதுவைக்குட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என நாராயணசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் தமிழக அரசோ தன் நிலைப்பாடு பற்றி கூறாமல் தொடர்ந்து மவுனமாக உள்ளது. இந்த பிரச்சினையின் தீவிரம் புரியாமலேயே பலர் அமைதியாகவே உள்ளனர்.
எலியும் பூனையுமாக இருந்த ராவும், நாயுடுவும்.. பாஜக அரசை வீழ்த்த கேசிஆருக்கு அழைப்பு!
கெயில் குழாய் அமைப்பதை தடுத்தால் மக்கள் மீது கைது, வழக்கு என அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாய்கிறது. மக்களுக்கு பாதுகாவலாக தமிழக அரசு இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினார். 2016-க்கு முற்பட்ட அனைத்து கிணறுகளும் ஒற்றை உரிமத்தின் கீழ்கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அப்படியானால் ஒட்டுமொத்த காவிரிபடுகையும் காணாமல் போய்விடும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை கேட்டு கொள்வதாக கூறினார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.