காவிரி காப்பாளர்.. விவசாயிகள் கொடுத்த பட்டம்.. நெகிழ்ந்த எடப்பாடியார்.. பல மாஸ் திட்டங்கள் அறிவிப்பு
திருவாரூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, 'காவிரி காப்பாளர்' என்ற பட்டப்பெயரை காவிரி டெல்டா விவசாய சங்கத்தினர் சூட்டியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடியாருக்கு திருவாரூரில் இன்று இரவு பாராட்டு விழாவுக்கு, விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன. அதில்தான், இப்படி ஒரு பட்டத்தை சூட்டியுள்ளனர்.
விழாவில் முதல்வர் பேசியதாவது: தூர்வாரப்பட்டு உள்ளதன் காரணமாக கடைமடை பகுதிவரை தண்ணீர் தடையின்றி சென்றுள்ளது. இதனால் 7 லட்சம் ஏக்கர் கூடுதல் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 1897 கொள்முதல் மையங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1865 வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.55. டெல்டா பகுதியில் 20 சதவீதம் நீர் வீணாகிறது. அந்த நீரை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
நீண்டகாலமாக விவசாயிகள் வைத்து வரும் கோரிக்கைகளை எங்கள் அரசு நிறைவேற்றி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக, அனைத்து விவசாய சங்க அமைப்புகளும் சேர்ந்து காவிரி காப்பாளர் என்ற ஒரு அற்புதமான படத்தை எனக்கு கொடுத்துள்ளார்கள்.
விவசாய காவலனாக விஸ்வரூபம் எடுக்கும் எடப்பாடியார்.. வந்தது சரபங்கா திட்டம்.. மகிழ்ச்சியில் மக்கள்!
காவிரியை காக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உணருகிறேன். இத்தோடு முடிந்துவிடவில்லை.. இனி எப்போது பிரச்சனை வந்தாலும் காவேரியை நீங்கள்தான் காக்க வேண்டும் என்ற பொறுப்பை என் மீது சுமத்தி விட்டீர்கள். நிச்சயமாக கண்ணை இமை காப்பது போல டெல்டா பாசன விவசாயிகளை, நானும் எங்களுடைய அரசும் நிச்சயமாக காப்போம்.
அச்சப்பட தேவையில்லை. நான் ஒரு விவசாயி என்ற காரணத்தால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். படிப்படியாக விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்படுவதற்கு எனது அரசு அனைத்து விதமாகவும், துணை நிற்கும்.
நெல் ஜெயராமன் பெயரில் நீடாமங்கலத்தில் இயற்கை நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். வெற்றிலைக்கான சிறப்பு மையம் கும்பகோணத்தில் அமைக்கப்படும். 15 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் மண்டலம் டெல்டா மாவட்டங்களில் அமைக்கப்படும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை அதிமுக அரசு நிச்சயமாக நிறைவேற்றியே தீரும்.
ஹைட்ரோ கார்பன் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற அரசு பரிசீலனை செய்து வருகிறது. மன நிறைவோடு வாழக்கூடியவர்கள் விவசாயிகள், சொந்தக் காலிலே நிற்கக் கூடியவர்கள். வெயில், மழை என்று பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். இந்தியாவில் 100க்கு 65 பேர் விவசாயிகளாக வாழ்கின்றனர், நானும் ஒரு விவசாயிதான். இந்த கூட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரையும் முதல்வராகவே பார்க்கிறேன்.
எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.