கொத்தமங்கலத்தில் ஒரு ஆச்சரிய சந்திப்பு.. திருமாவளவனும், தினகரனும் கை குலுக்கிய அந்த தருணத்தில்!
புதுக்கோட்டையில் டிடிவி தினகரன் - திருமாவளவன் சந்தித்து கொண்டனர்.
ஆலங்குடி: சில எதிர்பாராத காட்சியை திடீரென்று பார்த்தால் நமக்கு புல்லரித்துபோகும். அப்படித்தான் இவர்கள் இருவரையும் பார்க்கும்போது ஏற்பட்டது.
கஜா புயல் பாதித்த பகுதிகளை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் பார்வையிட்டு வருகிறார்கள். டெல்டா பகுதிகளில் ஆளுக்கொரு பக்கம் ஆய்வு நடத்தி, மக்களுக்கு நிவாரணம், நிதியுதவி உள்ளிட்டவற்றை செய்து ஆறுதல் சொல்லியும் வருகிறார்கள்.
இப்படித்தான் புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆய்வு பணியில் இறங்கி உள்ளார். நேற்றும்கூட அங்குள்ள மக்களுக்கு தன் தொண்டர்களுடன் இணைந்து உதவிகளை செய்து கொண்டிருந்தார். அதேபோல அந்த மாவட்டத்திலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
எதிர்பாராத சந்திப்பு
மாவட்டம் முழுக்க தனித்தனியே ஆய்வு செய்து வந்த இவர்கள் இருவரும் திடீரென்று கொத்தமங்கலம் பகுதிக்கு வந்துவிட்டார்கள். முதலில் திருமாவளவன்தான் அங்கு சென்றிருந்தார். கொஞ்ச நேரத்தில் டிடிவியும் அதே பகுதிக்கு வந்து காரில் இறங்கினார். ஒருவரையொருவர் நேருக்கு நேராக பார்த்து கொண்டார்கள்.
நலம் விசாரிப்பு
எதிர்பாராத இந்த சந்திப்பினால் அங்கிருந்த மக்களும் ஆர்வத்துடன் இருவரையும் கவனித்து கொண்டே இருந்தார்கள். டிடிவியும், திருமாவளவனும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். பிறகு அங்கேயே நின்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு ஆளுக்கொரு பக்கம் நிவாரண பணிகள் வேலைகளை கவனிக்க கிளம்பி விட்டார்கள்.
யதார்த்த சந்திப்பு
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னதிலிருந்தே குழப்பமும், சர்ச்சையும் நீடித்து வருகிறது. இந்நிலையில் இருவரும் பேசிக் கொண்டதை சிலர் அரசியலாக்கியும் வருகின்றனர். கூட்டணி பற்றியோ, அரசியல் பற்றியோ பேசுவதாக இருந்தால் அதற்கு வெட்டவெளிச்சமாக கொத்தமங்கலம் கிராமத்தைதான் இருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்லையே. எனவே இது ஒரு யதார்த்தமான சந்திப்புதான்.
வைகோ நடைபயணம்
மேடைகளை தவிர இப்படி அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் சந்தித்து கொள்வது எப்போதாவதுதான் நம் ஊரில் நடக்கும். இப்படிப்பட்ட அபூர்வமான சந்திப்பின்போது சந்தித்து கொள்பவர்களைவிட சுற்றி இருப்பவர்களுக்குதான் ஆர்வம் அதிகமாகிவிடும். இப்படித்தான் ஒருமுறை மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ தன் கட்சியினருடன் நடைபயணம் போய் கொண்டிருந்தார்.
தலையில் துண்டு
வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, தலையில் ஒரு துண்டை சுற்றிக் கொண்டு மண்டை பிளக்கும் உச்சி வெயிலில் ரோடில் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது சிறுதாவூருக்கு போவதற்காக ஜெயலலிதா எதிரே காரில் வந்தார். வைகோவை கடந்தும் ஜெயலலிதா கார் கடந்தது. ஆனாலும் நடந்து போவது வைகோ என்று தெரிந்ததும் மீண்டும் கார் ரிவர்ஸில் வந்தது.
அம்மா எப்படி இருக்காங்க?
பிறகு வைகோவும் ஜெயலலிதாவும் சந்தித்து கொண்டார்கள். "உங்க அம்மா எப்படி இருக்காங்க?" என்று ஜெயலலிதா கேட்க, வைகோவும் "நலம்" என்றார். "எங்கே இப்படி நடந்து போய்ட்டு இருக்கீங்க?" என்று ஜெயலலிதா கேட்க, மதுவிலக்கு பற்றி வைகோ விளக்கமளிக்க, "நடைபயணத்துக்கு வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ஜெயலலிதா. தொடரட்டும் இதுபோன்ற அரசியல் தோழமை சந்திப்புகள்.. மக்களுக்கும் ஏதாவது நல்லது நடந்தால் சரித்தான்!