ஊருக்கு ஒரு அஸ்வினி இருந்தால்.. நாடு எவ்வளவு சுபிட்சமா இருக்கும்.. சபாஷ் டாக்டர்!
கும்மிடிப்பூண்டி கவுன்சிலர் டாக்டர் அஸ்வினி பதவி ஏற்று கொண்டார்
திருவள்ளூர்: இதுக்குதான் ஊருக்கு ஒரு டாக்டர்.. பொறுப்பில் இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்றது.. என் கிராமங்களுக்கு இலவச மெடிக்கல் கேம்ப் நடத்த போகிறேன் என்று சொல்கிறார் 22 வயதில் கவுன்சிலரான டாக்டர் அஸ்வினி!
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக நடந்து முடிந்தது.. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.
எப்பவும் இல்லாமல் இந்த முறை தேர்தல் மிக மிக வித்தியாசமாக நடந்தது.. வேட்பாளர்களுக்குள் கடுமையான போட்டி நடந்தது.. இளம் தலைமுறையினர் ஏராளமானோர் வரிந்து கட்டிக் கொண்டு மனு தாக்கல் செய்தனர்.. இதில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.
தோற்றுபோன மகேஸ்வரி வீட்டுக்காரர்.. ஏலம் எடுத்த ரூ.14 லட்சத்தை திருப்பி கேட்கிறாரா.. வைரலாகும் வீடியோ
புதுகும்மிடிப்பூண்டி
21, 22, 23 வயதுடைய இளைஞர்கள் அபார வெற்றி பெற்றது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும், புதிய மாற்றத்துக்கான துவக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அஸ்வினி சுகுமாரனும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.. இந்த ஊராட்சியின் தலைவராக போட்டியிட்டவர் இவர்.. 22 வயதுதான்.. இவர் ஒரு டாக்டர்!
வாழ்த்து
இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கேஎஸ் விஜயகுமார் நேரில் வாழ்த்து சொன்னார்... தனக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளரை விட 2,547 வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார் அஸ்வினி.
சாதனை
அது மட்டுமல்ல.. திருவள்ளூர் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் என்ற சாதனையையும் அஸ்வினி படைத்து உள்ளார். வெற்றி பெற்று பொறுப்பேற்றது குறித்து டாக்டர் அஸ்வினி சொன்னதாவது:
மெடிக்கல் கேம்ப்
"என்னுடைய ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில், சிறப்பான ஊராட்சி பணிகளை மேற்கொள்வேன்.. அதிலும் மருத்துவ சேவைகளையும் செய்ய போகிறேன்.. புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தருவேன்.. இ-சேவை மையத்தையும் அமைக்க போகிறேன். மாதம் ஒருமுறை ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திடவும் முடிவு செய்துள்ளேன்" என்கிறார் பூரிப்புடன்!