என்ன கொடுமை இது.. புயல் தாக்கி 15 நாளாச்சு.. ஒருவர் கூட எட்டிப் பார்க்காத நரிக்குறவ கிராமம்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஒரு நரிக்குறவ சமுதாயத்தினர் பகுதியை புயல் தாக்கி 15 நாட்களாகியும் யாருமே இன்னும் எட்டிக் கூட பார்க்கவில்லையாம். அந்தப் பகுதி தொடர்ந்து மழை நீர், சேறும் சகதியுமாக உள்ளது. நிவாரண உதவிகள் கிடைக்காமல் இந்த மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் பைப்பாஸ் சாலை அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக நரிகுறவர்கள் இனத்தை சேர்ந்த மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்த இடத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு அரசு சார்பில் நரிகுறவர் குடும்பத்தை சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
மழை மற்றும் வெள்ளக்காலங்களில் மழைநீர் தேங்கி குடியிருப்பை சூழ்ந்துவிடும். அதனால் மிகவும் தாழ்வாக இருந்த இந்த இடத்தை அந்த மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து தரை மட்டத்தை உயர்த்தி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் துறை அதிகாரிகள், தாலுக்கா அலுவலகம், பொது பணித்துறை அலுவலகம் போன்றவைகள் கட்ட அந்த இடத்தை தேர்வு செய்தனர்.
பட்டா இல்லாத பகுதி
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்துறை அதிகாரிகள் அங்கு குடியிருந்த 24 குடும்பங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களிடம் அதே பகுதியில் உள்ள நம்மங்குறிச்சி சாலையில் ஓரிடத்தை தேர்வு செய்து தாங்கள் குடியிருப்புகளை மாற்றிக் கொள்ளும்படியும், அந்த இடத்திற்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் கூறி உள்ளனர். இதனை நம்பி அந்த மக்களும் குடியிருப்பை காலி செய்து மாறிக் கொண்டனர். ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு தற்பொழுது உள்ள இடத்திற்கு பட்டாவும் வழங்கவில்லை. அப்பகுதிக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.
கண்டுகொள்ளாத நிர்வாகம்
இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். இரவு நேரங்களில் விஷ பூச்சிகள், பாம்பு தொல்லைகளுடன் குழந்தைகளை வைத்து கொண்டு வசிக்கும் பரிதாப நிலையில் இருந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை இம்மக்கள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட அதிகாரிகளிடம் புகார் மனு மற்றும் நேரில் சந்தித்தும், முறையிட்டும் அதிகாரிகள் யாரும் கண்டுக் கொள்ளவில்லை. இதனால் இங்கு குடியிருக்கும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் சமீபத்தில் முத்துப்பேட்டை பகுதியை தாக்கிய கஜா புயல் இந்த நரிகுறவர்கள் குடியிருப்புகளையும் புரட்டி போட்டது. இங்குள்ள மக்களை புயலுக்கு முதல்நாள் அதிகாரிகள் மீட்டு முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முகாமில் தங்கவைத்தால் இந்த மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் வீடுகளும் உடமைகளும் சேதமானது.
கொடுமையான வாழ்க்கை
குடியிருப்புகள் முழுவதும் முழங்கால் அளவில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. நடைப்பாதையும் சேறும் சகதியுமாக மக்கள் நடந்துகூட செல்ல முடியாதளவில் உள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு வாரங்கள் நடந்தும் இதுநாள்வரை அந்த குடியிருப்பு பகுதியை அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொண்டு அமைப்புகள் கூட எட்டியும் பார்க்கவில்லை உதவிகரமும் நீட்ட வில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாற்றினர். இதுகுறித்து நரிகுறவர்கள் குடும்பத்தை சேர்ந்த முருகேஷ், மாரியம்மாள் ஆகியோர் கூறுகையில்:
தவிப்பில் 30 குடும்பங்கள்
இங்கு நாங்கள் சுமார் 30 குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வருகிறோம். 15 வருடங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஏற்கனவே குடியிருந்த இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்கினார். அதன் பின்பு எங்கள் குடியிருப்பை மாற்று இடம் தந்தனர். வந்த இந்த இடத்திற்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை அதனால் சாலை வசதி பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் நாங்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் தற்பொழுது கஜா புயலால் எங்கள் பகுதி முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு வீடுகள் சேதமானதுடன் குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வசிக்க முடியாதளவில் உள்ளது.
ஒருவர் கூட எட்டிப் பார்க்கலை
இதனை அரசு அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ எட்டிக்கூட பார்க்கவில்லை. இதுவரை எங்களுக்கு என்னா..? நிவாரணம் என்று கூட தெரியவில்லை எங்கள் பகுதியை சீரமைக்கவும் முன் வரவில்லை. வீடுகள் உடமைகளை விட்டு முகாமில் தங்கவும் மனம் வரவில்லை. இங்கே வந்து வாசிக்கவும் வாய்ப்பில்லை. அதனால் பாதிபேர் அங்கேயும் பாதிபேர் இப்பகுதி சாலையிலும் வாழ்ந்து வாருகிறோம் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவும் அவர்கள் படிக்கவும் கூட முடியவில்லை எங்களுக்கு எங்களுக்கு என்ன செய்வதென்று கூட தெரியவில்லை. ஆகவே இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு எங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.