ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்... திருவாரூரில் 770 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு
Recommended Video
திருவாரூர்: திருவாரூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 770 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவாரூரில் நேற்று முன்தினம் பேரணி நடந்தது.
திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் சென்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பேரணி முடிவில் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். பேரணி யால் திருவாரூர்-தஞ்சை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 770 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.