தமிழக அரசியலுக்கு கேன்சர்.. மன்னார்குடியில் ஜெயானந்த் திவாகரன் காட்டம்
மன்னார்குடி: தமிழக அரசியலுக்கு கேன்சர் வந்துள்ளது என திவாகரன் மகன் ஜெயானந்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலாவின் ஒவ்வொரு சொந்தங்களாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பதும் கட்சி தொடங்குவதுமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சசி வீட்டு இளம் தலைமுறைகளில் ஜெயானந்த் திவாகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
அண்மையில் சசிகலாவின் சகோதரன் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அக்கட்சி சார்பில் மன்னார்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் திவாகரன் மகன் ஜெயானந்த் கூறுகையில் திராவிடக் கட்சிகளை நாம் புறக்கணிக்கக் கூடாது. அக்கட்சிகள் ஆட்சியில் இருப்பதால்தான் தமிழர்கள் வடநாட்டுக்கு வேலைக்கு போகவில்லை. ஆனால் அவர்கள்தான் இங்கு வருகிறார்கள்.
தமிழக அரசியலுக்கு கேன்சர் வந்துள்ளது. ஓட்டுக்கு பணம் என்ற புற்றுநோய் வந்துள்ளது. இதை ஒழிக்க ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முதல் வேட்பாளரை மக்கள் புறக்கணித்து பிடித்து கொடுத்தால் அடுத்த வேட்பாளர் பணம் கொடுக்க மாட்டார்.
மக்களிடம் அறியாமை அதிகமாக உள்ளது. இப்படியே போனால் நம் சந்ததிக்கு கள்ளாபெட்டியை கொடுக்க முடியாது. சவப்பெட்டியைதான் கொடுக்க முடியும் என்றார் ஜெயானந்த்.