ஊரெங்கும் தோரணம்..வீடுகளில் பலகாரம்..கமலா ஹாரிஸ் பதவியேற்பை திருவிழாவாக கொண்டாடும் துளசேந்திரபுரம்!
திருவாரூர்: கமலா ஹாரிஸ் அமெரிக்கா துணை அதிபராக இன்று பதவியேற்க உள்ள நிலையில் அவரது தாய் வழி தாத்தா ஊரான திருவாருர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமம் களைகட்டியுள்ளது.
ஊர் முழுவதும் தோரணம், வீடுகளில் பலகாரம் செய்தல் என கமலா ஹாரிஸ் பதவியேற்பை பண்டிகைபோல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். கமலா ஹாரிசுக்கு கிடைத்த பெருமை கிராமத்தில் பல பெண்களுக்கு உத்வேகம் அளித்துள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். அவர் அதிபராகவும், இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் இன்று பதவியேற்க உள்ளனர். அதிபர் பதவியேற்புக்கான கோலாகல விழா இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணி முதல் நடக்கிறது.
தமிழகம் பூர்வீகம்
அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்கும் முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை 55 வயதான கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். கமலா ஹாரிஸின் தாய் வழி தாத்தா, திருவாருர் மாவட்டத்தை சேர்ந்தவர். அங்குள்ள பைங்காநாடு கிராமத்தில் இருக்கும் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர்தான் கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன். இவர் ஆங்கிலேயர் காலத்திலேயே சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார்.
திருவிழாபோல் கொண்டாட்டம்
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ள நிலையில் துளசேந்திரபுரம் கிராமமே பண்டிகைபோல் களைகட்டியுள்ளது. கமலா ஹாரிஸ் பதவியேற்பை காண்பதற்காக அந்த கிராம மக்கள் தயாராகி வருகின்றனர். இதனை கொண்டாடும் விதமாக அங்குள்ள சாலைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். கோவில்களில் பலர் கமலா ஹாரிசுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில மக்கள் வீடுகளில் பண்டிகை காலம்போல் முறுக்கு சுட்டும் வருகின்றனர். கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு உத்வேகம்
முறுக்கு சுட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த சிவரஞ்சனி என்பவர் கூறுகையில், இன்று எங்கள் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளதால் கிராமத்தில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறோம். கமலா ஹாரிசுக்கு கிடைத்த பெருமை கிராமத்தில் பல பெண்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
பலகாரம் செய்கின்றனர்
துளசேந்திரபுரத்தில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த எங்களின் கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராவதை கிராம மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கமலா ஹாரிஸுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். கிராமத்தில் உள்ள அனைவரும் பண்டிகை போல் பலகாரங்கள் செய்து வருகின்றனர்.