கருணாநிதி தாத்தாவின் சொந்த ஊரில் பேரன் அருள்நிதி தீவிர பிரச்சாரம்
திருவாரூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் அவரது பேரன் அருள்நிதி, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2006ம் ஆண்டு திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு கருணாநிதி உயிரிழந்தார்.
இதையடுத்து மக்களவை தேர்தலோடு திருவாரூர் தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கருணாநிதியின் மகன் மு.க தமிழரசுவும், அவரது மகன் அருள்நிதியும் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்
திருவாரூரின் விளமல் பகுதியில் 100 தொண்டர்களுடன் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரத்தை தொடங்கி அவர்கள், புதிய பேருந்து நிலையம், வன்மீகபுரம், ரயில்வே காலனி குடியிருப்பு, மில் தெரு, உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
பிரச்சாரத்தின் போது 94 வயதான மொழிப்போர் தியாகி ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சென்று மு.க. தமிழரசு மற்றும் அருள்நிதி ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்த திருவாரூர் முழுவதும் அவர்கள் வாக்குசேகரித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியை தொடர்ந்து தற்போது கருணாநிதியின் மற்றொரு பேரனான அருள் நிதியும் பிரச்சாரத்தில் குதித்து இருப்பது திமுகவினரிடையே கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது.