சேர்ந்து வாழத்தான் முடியலை... சாகலாம் வா... - ரயில்முன் பாய்ந்த காதல் ஜோடிகள் உடல் சிதறி பலி
நீடாமங்கலத்தில் இளம் காதல் ஜோடியினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: சேர்ந்து வாழ முடியலை... சேர்ந்து செத்துப்போகலாம் என்று இளம் ஜோடியினர் எடுத்த முடிவு கொடூரமாக அமைந்துள்ளது. காதலில் ஜெயிக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. நீடாமங்கலத்தில் இளம் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த காதல் ஜோடி யார் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரியன், வினிதா என்று தெரியவந்தது. வினிதாவின் கையில் பிரியன் என்று கையில் பச்சைக் குத்தப்பட்டிருந்தது. இதனையடுத்தே இருவரும் காதலர்கள் என்று காவல்துறையினர் முடிவு செய்தனர்.
வாழ வேண்டிய வயதில் இளம் ஜோடி ஒன்று கொடூரமுறையில் உயிரை மாய்த்துக்கொண்டது ஏன் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உடல்களை மீட்ட காவல்துறையினர் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளம் காதல் ஜோடி
திருவாரூர் மாவட்டம் பழங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன் ராகுல் பிரியனும் காளாச்சேரி மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மகள் வினிதாவும் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக காதலித்து வந்தனர். கோவிலில் பார்ப்பது, சந்தையில் பேசுவது என மறைமுகமாக வளர்ந்தது.
நீடாமங்கலம் வந்த வினிதா
வினிதா படித்து முடித்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பளங்கத்துரைச் சேர்ந்த நபருடன் வினிதாவின் அக்காவிற்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த ராகுல் பிரியனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
எதிர்ப்பில் வளர்ந்த காதல்
இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் காதலை வளர்த்து வந்தனர் இளம் ஜோடியினர். மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து நீடாமங்கலம் வந்தார் வினிதா. அப்போது இருசக்கர வாகனம் மூலம் வினிதாவை அழைத்துப்போக வந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
காதல் ஜோடி தற்கொலை
பெற்றோர்கள் நம்மை வாழ விடமாட்டனர். நாம் இருவரும் சேர்ந்தே செத்துப்போவோம் என்று முடிவு செய்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். வையகளத்தூர் ரயில்வே கேட் கீப்பரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
இளம் ஜோடியின் உடல்கள் நான்கு துண்டுகளாக சிதறிக்கிடந்தன. இதனை நேரில் பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்படி கருமாதி செய்து விட்டோமே என்று கூறி அழுதனர். உடல்களை மீட்ட காவல்துறையினர் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.