புகாரா கொடுக்கிறீங்க... என்ன செய்றோம்னு பாருங்க... அலுவலர்கள் அட்டகாசம்
திருவாரூர்: மன்னார்குடி அருகே உள்ள அசேஷம் கிராமத்தில், சுகாதார சீர்கேடு தொடர்பாக புகார் அளித்தவருக்கே அபராதம் விதித்து வட்டார சுகாதார அலுவலர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.
ஊரெங்கும் டெங்கு பரவிவரும் நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் எழுதியவருக்கு நேர்ந்த இந்த சம்பவத்தால் அசேஷம் கிராமமக்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.
புகார் கொடுத்தால் அரசு அலுவலர்கள் இப்படித்தான் புகார் அளித்த நபருக்கே அபராதம் விதித்து தங்கள் பராக்கிரமத்தை காட்டுவார்களா என கிராமமக்கள் வினவியுள்ளனர்.
இந்தியர்கள் பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அதிபர் சூப்பர் அறிவிப்பு
சுகாதார சீர்கேடு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், வசிக்கும் பாரதிதாசன் நகரில் குடியிருப்புகளை ஒட்டி இறைச்சிக்கடைகள் நடத்தும் சிலர், ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவுகளை சாலையோரத்திலேயே போட்டுவிடுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
ஆய்வு
மேலும், அந்தப் புகாரின் நகலை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநருக்கும் முத்துக்குமார் அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க, அவர்களோ இதோ போகிறோம் எனக் கூறி ஆய்வுக்கு சென்றுள்ளனர்.
டுவிஸ்ட்
முத்துக்குமார் புகார் மனுவை அளித்துவிட்டு தனது விடுமுறை முடிந்ததால் சிங்கப்பூர் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அசேஷம் கிராமத்திற்கு சென்ற மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பழனிசாமி தலைமையிலான அலுவலர்கள், முத்துக்குமார் வீட்டு மொட்டை மாடியில் ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்தததாக கூறி ரூ.5,000 அபராதம் விதித்துள்ளார்.
மழுப்பல்
மேலும், புகாருக்குள்ளான இறைச்சி கடைகளுக்கு வெறும் ரூ.1,000 மட்டும் அபராதம் விதித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அசேஷம் கிராமமக்கள் இது தொடர்பாக மன்னார்குடி எம்.எல்.ஏ.டி.ஆர்.பி.ராஜாவிடம் முறையிட்டுள்ளனர். அவரும் வட்டாட்சியரை அழைத்து இது தொடர்பாக விளக்கம் கேட்க, அவரோ மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.