ஒரு அசைவும் இல்லை.. பட்டினியால் பிரிந்த உயிர்.. தொழிலாளர்கள் மீதும் தடியடி.. திருவள்ளூர் ஷாக்!
திருவள்ளூர் அருகே வடமாநில தொழிலாளி பசியால் மரணமடைந்துள்ளார்
திருவள்ளூர்: முகத்தில் தண்ணீர் தெளித்தும் பார்த்தும் ஒரு அசைவும் இல்லை.. தொடர் பட்டினியால் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சுருண்டு விழுந்து மாண்டுள்ளார்.. மேலும் "எங்களுக்கு சாப்பாடு இல்லை" என்று முறையிட வந்த தொழிலாளர்களை போலீசாரே கடுமையாக தாக்கிய சம்பவமும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இவ்வளவும் நடந்தது நம் தமிழக மாவட்டமான திருவள்ளூரில் என்பது ஜீரணிக்க முடியவில்லை!!
நாளுக்கு நாள் புலம் பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவத்து வருகிறார்கள்.. எத்தனையோ சலுகைகள் இவர்களுக்கு அறிவிக்கப்பட்டும், இந்த துயரம் ஒரு முடிவுக்கு வரவில்லை.
நாட்டின் பல்வேறு இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பசியால் மயங்கி விழுந்ததும், சுருண்டு விழுந்து நடுரோட்டிலேயே உயிரிழந்த சம்பவங்களும் வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த நிலையில், அந்த அவலம் தற்போது நம் மாநிலத்திலும் நடந்துள்ளது பெருத்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
ஆசிய நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.. உலக நாடுகளில் கடும் பாதிப்பை சந்தித்த இந்தியா
மாவட்ட நிர்வாகம்
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் பகுதியில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களை, ஒரு தனியார் கல்லூரியில் தங்க வைத்திருந்தனர்.. அங்கு அவர்கள் தங்க போதுமான வசதி இருந்தது.. ஆனால், உணவு சமைத்து வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் போலீசாரிடம் உதவி கேட்டு வந்துள்ளனர்.. கொஞ்சமும் இரக்கமின்றி அவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
வெங்கல்
அதேபோல, வெங்கல் அருகே புதுக்குப்பம் பகுதியில் ஒரு தனியார் செங்கல் சூளை உள்ளது.. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி கோரிக்கை விடுத்தனர்.. ஆனாலும் அவர்களை சூளையிலேயே தங்க வைத்து வந்த நிலையில், இன்று திடீரென தங்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று தங்கள் ஓனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வட மாநிலத் தொழிலாளர்கள். தும்மா படி, நயவன், கோபால் சுபாவ், ரிஷிவந்தி என்ற பெண் உட்பட 4 பேரை தாக்கியும் உள்ளனர்.
4 பேருக்கு ரத்த காயம்
இதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. 3 பேருக்கு கை கால்களில் காயம் ஏற்ப்பட்டு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.. தகவலறிந்த வெங்கல் போலீசார், நேரில் சென்று ஆய்வு செய்தனர்.. பிறகு அவர்களை கூடிய சீக்கிரம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி தந்தனர்.. இறுதியாக, வட மாநிலத் தொழிலாளர்களை தாக்கியதாக உரிமையாளர்கள் முனுசாமி, லட்சுமிபதி, மேனேஜர் ஆசீர்வாதம் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காய்ந்த வயிறு
இவர்கள் வயிறார சாப்பிட்டே நாட்கணக்கில் ஆகும்போது, தாக்குதல் நடத்தி உடம்பெங்கும் காயங்களை ஏற்படுத்தி உள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. சாப்பிட எதுவும் இல்லாமல், கேட்டாலும் எந்த உதவியும் செய்யப்படாத நிலையில், மிச்சமுள்ள தொழிலாளர்கள் காய்ந்த வயிறுடன் நடந்தபடி உள்ளனர்.. எப்படியாவது சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் உதவி என்று கேட்டு வந்தனர்.. ஆனால் இப்படி அடித்து ரத்தகாயங்களை ஏற்படுத்துவார்கள் என்று அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
உயிரிழப்பு
அதேபோல, கும்மிடிப்பூண்டி அடுத்த சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.. பின்னர் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்... இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் பதறியடித்து கொண்டு, முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளனர்... ஆனால், அவரிடம் ஒரு அசைவும் இல்லை.
பீகார் நபர்
இதனால் டாக்டரை வரவழைத்து பார்த்தபோது, அந்த தொழிலாளி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவரது பாக்கெட்டை ஆய்வு செய்தபோது, ஆதார் அட்டை இருந்தது.. அதில் அந்த நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம் பிஸ்வாஸ், வயது 42 என்று இருந்தது.. இதையடுத்து, கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு போஸ்மாட்டம் செய்ய பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அதிர்ச்சி
நடந்தே ஒடிசா சென்று சேர்ந்துவிடலாம் என்று நடந்து வந்த நிலையில், தொடர் பட்டினியால் ராம்பிஸ்வாஸ் சுருண்டு விழுந்து மாய்ந்துள்ளார் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.. இப்படி வடமாநில தொழிலாளர்கள் ரத்த காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கப்பட்டு வருவதும், பசியால் சுருண்டு விழுந்து உயிரிழந்து வருவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதெல்லாம் நடப்பது நம்ம தமிழ்நாட்டில்தான் என்பது அதைவிட கொடுமை!!