வழியில் போராட்டம்.. இறங்கி வேண்டிய கமல்.. வழிவிட்ட பெருந்தன்மை.. நெகிழ வைத்த திருவாரூர் மக்கள்!
மறியல் நடந்தபோது கமலுக்கு வழிவிட்டு பொதுமக்கள் உதவியுள்ளனர்.
Recommended Video
திருவாரூர்: திருவாரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் நடிகர் கமல்ஹாசன் செல்ல வழிவிட்டனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக கமல் இன்று சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி கிளம்பினார். பிறகு அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, "இன்று தஞ்சை கிளம்புகிறேன் என்றும், 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல போவதாகவும் கூறினார்.
இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத, நிவாரண பொருட்கள் கிடைக்காத குக்கிராமங்களுக்கும் நாங்கள் சென்று வழங்க அதனை உள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படியே இன்று பிற்பகல் தஞ்சைக்கு பயணமானார்.
சாலை மறியல்
இதனிடையே, புயல் பாதித்து யாருமே தங்களை எட்டி பார்க்காததால் டெல்டா மக்கள் கோபமாக உள்ளனர். இதற்காக தமிழக அரசை கண்டித்து தினமும் சாலைமறியல், போராட்டம் என ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் இன்றும் கூட திருவாரூர் அருகே கோட்டூரில் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் சுற்றுவட்டாரத்திலுள்ள அம்மாபேட்டை, கோட்டூர், அம்மையப்பன் ஆகிய இடங்களிலிருந்து பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
வழிவிடவில்லை
அந்த நேரத்தில் கமல் அந்த பக்கம் வழியாக தஞ்சை சென்று கொண்டிருந்தார். கமல் வருவதை அறிந்த மக்கள், அவரை முற்றுகையிட்டனர். அவரது வாகனத்துக்கு வழியும் விடவில்லை. இதனால் கமல், உள்ளிட்டவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுவழியிலேயே நின்றனர்.
வழி விட்டு ஒதுங்கினர்
இதையடுத்து, போராட்டக்காரர்களிடம் கமல், நிவாரண பொருட்களுடன் வந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகவே வந்திருக்கிறோம் என்று கூறி மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், பொதுமக்கள், கமலுடன் இருந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் வைத்திருந்த உணவு பொட்டலங்களை பார்த்தபிறகு மனம் வருந்தினர். தொடர்ந்து கமலின் பயணத்துக்கும் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.
நெகிழ்ந்த கமல்
இதுகுறித்து கமல் நெகிழ்ச்சியுடன் டிவீட் போட்டுள்ளார். அதில் "இவர்களா ஏழைகள், பெருந்தன்மைச் செல்வந்தர்கள்" என்று நெகிழ்ந்துள்ளார் கமல்.