கோலம், பட்டாசுகள், இனிப்புகள்... கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடும் துளசேந்திரபுரம் கிராமம்
மன்னார்குடி: அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீக கிராமமான மன்னார்குடி துளசேந்திரபுரம் மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
கமலா ஹாரிஸின் தாயார் ஷ்யாமளா கோபாலன், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபும் கிராமத்தைச் சேர்ந்தவர். அமெரிக்கா சென்ற ஷ்யாமளா, ஜமைக்கா நாட்டின் ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நவம்பர் 3-ந் தேதியன்று துளசேந்திரபுரம் கிராம மக்கள் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது தாய்வழி குலதெய்வமான அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பேனர்களை வைத்திருந்தனர்.
தற்போது துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகி உள்ளதை துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து கோலங்களை வீடுகள் முன் பெண்கள் போட்டிருந்தனர்.
அதில் வணக்கம் அமெரிக்கா என ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். எங்களது கிராமத்தின் பெருமைக்குரியவர் எனவும் கோலத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தனர் துளசேந்திரபுரம் மக்கள்.
உண்மை, அறிவியல், ஒற்றுமையை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள்.. நாட்டு மக்களிடையே கமலா ஹாரிஸ்
மேலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி துளசேந்திரபுத்தில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.