உயிரை குடித்த சிக்கன் பிரியாணி.. சோகமான வளைகாப்பு விழா..திருவாரூர் மருத்துவமனையில் 5 பேர் அனுமதி
திருவாரூர்: வளைகாப்பு விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் இதில் ஆறு பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் அருகே உள்ள திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள், 26. இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இவருக்கு 5ஆம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் வீட்டில் நேற்று முன் தினம் நடந்தது. அதன்பின் நடந்த விருந்தில் 5 வகை கலவை சாதம் ஆகியவற்றுடன் பிரியாணி பரிமாறப்பட்டது.
பொன்னியின் செல்வன் எஃபெக்ட்! சோழ மன்னர்களின் பெயர் கொண்டவரா நீங்க? கவுரவிக்கும் ஹக்கீம் பிரியாணி!
வாந்தி மயக்கம்
இந்த நிலையில் இந்த விருந்தில் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் ,24, சந்துரு 10, இளரா 62, செல்வகணபதி 25, பாலாஜி 22, ராஜமாணிக்கம் 60, கர்ப்பிணி மாரியம்மாள், 4 வயது குழந்தை ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் 24 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெட்டுப்போன உணவுகள்
பொது விருந்து விழாக்களில் பங்கேற்பவர்களுக்காக உணவு சமைப்பவர்கள் பலரது உயிரை கவனத்தில் கொண்டு சமைக்க வேண்டும். தரமற்ற பொருட்களை கொண்டு உணவு சமைத்தால் எளிதில் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. அது தவிர விருந்துக்காக சீக்கிரமே சமைத்தாலும் உணவு கெட்டுபோக வாய்ப்பு உள்ளது. எனவே விருந்து பரிமாறும் முன்பாக உணவின் தரத்தை பரிசோதித்து சாப்பிட தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.