கஜா பாதிப்பிலும் பாரம்பரியம் மறவாமல் பொங்கல் விழா.. தன்னம்பிக்கை தந்த திருவாரூர் மக்கள்
Recommended Video
திருவாரூர்:கஜா புயலால் பாதிக்கப்பட்ட போதிலும்.. சோகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை திருவாரூர் மாவட்டத்தில் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழகத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய இயற்கை சீற்றங்களில் ஒன்றாக கருதப்படுவது கஜா புயலும்... அதன் தாக்கமும். கடுமையான சேதம், பொருள் இழப்புகளை ஏற்படுத்திய இந்த புயலால் டெல்டா மாவட்ட மக்கள் விக்கித்து போயுள்ளனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து அரசு தரப்பிலும், தனியார் மற்றும் சமூக நல அமைப்புகளின் தரப்பிலும் உதவிகளை எதிர்பார்த்து டெல்டா பகுதி மக்கள் காத்து கிடக்கின்றனர். தங்களின் வாழ்வாதரத்தை முற்றிலும் இழந்து விட்டதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
உதவிகள் கிடைக்காமல் பல பகுதிகளில் வசிக்கும் இருப்பதை அறிந்து, தன்னார்வ அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கைகொடுத்து வருகின்றனர்.
தமிழர் திருநாள் கொண்டாட்டம்
கஜா புயல் பாதிப்பு, சேதம் ஆகியவற்றில் உழன்றாலும்... அதில் இருந்து மீண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் வண்ணம் டெல்டா பகுதி மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
பொங்கலிட்டு மகிழ்ச்சி
திருவாரூர் அருகே நென்மேலி கிராமத்தில் தங்களது வீட்டின் வாசலில் அனைவரும் ஒன்றாகக் கூடி புதுப்பானை வைத்து, தை மகளை வரவேற்றனர். வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.
உற்சாக கொண்டாட்டம்
புத்தாடை அணிந்து பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள், வாசலில் வண்ணக் கோலமிட்டனர்.
வரவேற்ற தோரணங்கள்
வீடுகளில் விருந்தினரை வரவேற்கும் தோரணங்கள் என விவசாயிகளின் வீட்டில் உழவர் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுடன் சூரியனை வழிப்பட்டு, நன்றி தெரிவித்தனர்.
கஜாவை மறந்து பொங்கல் திருவிழா
இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியதால் மக்கள் பல்வேறு துன்பத்துக்கு ஆளாகினர். இருப்பினும் பாரம்பரிய பண்டிகையான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் தங்கள் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடினர்.