நெல்லுக்கு 2500.. கரும்புக்கு 4 ஆயிரம் எங்கே? ஏக்கத்தோடு பட்ஜெட்டை வரவேற்கிறோம் - பி.ஆர்.பாண்டியன்
திருவாரூர் : திமுக ஆட்சிக்கு வந்தால் 1 குவிண்டால் நெல்லுக்கு ரூ 2,500 கரும்புக்கு 4 ஆயிரம் வழங்குவோம் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் எனவும், இரண்டு வேளாண் பட்ஜெட் நிறைவடைந்துள்ள நிலையில் இதுகுறித்து வாய் திறக்காதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பனைத்தொழிலுக்கு சிறப்பு அங்கிகாரம், டிஜிட்டல் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்ற நிலையில் பலரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை..நிர்வாகத்திறமை இல்லாத திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு

பி.ஆர்.பாண்டியன் கருத்து
இந்நிலையில் வேளாண் இரண்டு பட்ஜெட் நிறைவடைந்துள்ள நிலையில் இதுகுறித்து வாய்திறக்காதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள். இந்த பட்ஜெட் இயற்கை விவசாயிகளுக்கும் மருத்துவகுணம் கொண்ட உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் அதை சந்தைப்படுத்துவதற்கான பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை கொண்ட அறிவியல் பார்வையுடன் கூடிய ஒரு பன்முகத்தன்மை கொண்ட பட்ஜெட்டாக வழங்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் வரவேற்பு
இதனை தமிழக விவசாயிகள் வரவேற்கிறோம் அதே நேரத்தில் அதற்கான விலை உத்திரவாதம் இல்லாமல் இந்த பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதால் அரசு உடைய நோக்கம் வெற்றி பெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உற்பத்திக்கும் சந்தைக்குமான கட்டமைப்புகள் உருவாக்குகிற அதே நேரத்தில் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்தி செய்யப்படுகிற அனைத்து பொருட்களுக்கும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தை வழங்க முன்வரவேண்டும் .

தொலைநோக்கு பட்ஜெட்
குறிப்பாக உழவர் சந்தைகளை கூடுதல் ஆக்குவதற்கும் மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே கைவிடப்பட்ட நிலையில் இன்றைக்கு அது மீண்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளாண் உற்பத்திபொருட்கள் சார்ந்த சந்தை, மண்ணுக்கேற்ற பயிர் வகைகள் , பயிர் வாரி முறைகளை அமல்படுத்துவது விதமாக இதற்கான ஆய்வு மண்டலங்கள் விற்பனை சந்தைகள் ஆகியவை எந்தெந்த பகுதியில் காய்கறிகள் விளைவிக்க முடியும் எந்தெந்த பகுதியில் எண்ணெய் வித்துக்கள் விளைவிக்க முடியும் சிறுதானிய விதைகள் உற்பத்தி செய்ய முடியும் என்பதை ஆய்வுகள் செய்து அதற்கான அடிப்படையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை சந்தை வசதிகளை உருவாக்கியிருக்கிற ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்.

ஏக்கத்தோடு வரவேற்பு
இருந்தும் நெல்லுக்கு ரூ 2,500 கரும்புக்கு 4ஆயிரம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வழங்குவோம் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் இரண்டு பட்ஜெட்டுக்குள் நிறைவடைந்த நிலையில் இது குறித்து வாய் திறக்காது விவசாயிகளுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது பட்ஜெட் வரவேற்கக்கூடிய பட்ஜெட்டாக இருந்தாலும் விலை உத்தரவாதம் இல்லாததால் விவசாயிகளுக்கு பயனளிக்குமா என்கிற ஏக்கத்தோடு இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.